அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்காக அருளிய இந்த மகத்தான ஷரீஅத்தை, அவர்களுக்கான பேரருளாகவே ஏற்படுத்தியுள்ளான்.
அதன் மூலம் அவர்களின்:
மார்க்கம்
உயிர்
அறிவு
செல்வம்
மானம்
ஆகிய ஐந்து அடிப்படை அம்சங்களையும் பாதுகாக்கின்றான்.
இவற்றையெல்லாம் சீரழிக்கும் மிகப் பெரிய ஆபத்துகளில் ஒன்றுதான் போதைப்பொருள்!
அது உயிரைக் குடிக்கும் நஞ்சு. சமூகத்தைச் சீரழிக்கும் சாபக்கேடு.
போதைப்பொருட்களுக்கு அடிமையாகும் ஒருவர், படிப்படியாக அழிவின் பாதையில் தள்ளப்படுகிறார். இறுதியில் அவர் சமூகத்தாலும் மறக்கப்பட்டு, தன்னையும் இழந்தவராக ஆகிவிடுகிறார்.
அல்லாஹ் கூறுகிறான்:
وَلَا تَقْتُلُوا أَنْفُسَكُمْ إِنَّ اللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا وَمَنْ يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا
"நீங்கள் உங்களையே அழித்துக்கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிகுந்த கருணையுடையவன். எவன் அநியாயமாகவும் அத்துமீறியும் அவ்வாறு செய்கிறானோ, அவனை நாம் நிச்சயமாக நரக நெருப்பில் புகுத்துவோம்." (அல்குர்ஆன் 4:29–30)
இந்த வசனம், அல்லாஹ் தடை செய்தவற்றை உட்கொண்டு தன்னைத் தானே அழிவிற்கு இட்டுச் செல்லும் ஒவ்வொருவருக்கும் கடுமையான எச்சரிக்கை.
இதனை வள்ளல் நபி ﷺ அவர்கள் மேலும் வலியுறுத்தி கூறினார்கள்:
مَنْ قَتَلَ نَفْسَهُ بِسُمٍّ؛ فَسُمُّهُ بِيَدِهِ، يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ، خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا
"எவர் நஞ்சைக் குடித்து தன்னைத் தானே கொன்று கொள்கிறாரோ, அவர் அந்த நஞ்சைத் தமது கையில் வைத்தபடியே நரக நெருப்பில் தொடர்ந்து குடித்துக் கொண்டிருப்பார்." (முஸ்னத் அஹ்மத், திர்மிதி)
போதைப்பொருட்கள், மனிதனை அழிக்கும் மிகக் கொடிய நஞ்சுகள்.
எவ்வளவு ஆச்சரியமான நிலை!
ஒருவன் தனது குடும்பத்திற்கும் பிள்ளைகளுக்கும் செலவிடத் தயங்குகிறான். ஆனால், தன்னை அழிக்கும் போதைப்பொருளுக்காக தனது செல்வத்தை மனமுவந்து செலவிடுகிறான்.
நாளை மறுமையில் அல்லாஹ் அவனிடம் கேட்கும்போது அவன் என்ன பதில் கூறுவான்?
عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ... وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ، وَفِيمَ أَنْفَقَهُ؟
"அவன் தனது ஆயுளை எவ்வாறு கழித்தான்? தனது செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தான்? அதை எதில் செலவிட்டான்?" (திர்மிதி)
அந்தக் கேள்விகளுக்கான பதிலை அவன் தயாராக வைத்திருக்கிறானா?
அல்லாஹ் மனிதனுக்குப் பெருமையாக வழங்கிய அறிவொளியை, அவனே தன் கைகளால் அணைத்துக்கொள்ள எவ்வாறு மனம் ஒப்புகிறது?
தாபிஈ;fகளின் தலைசிறந்த அறிஞரான ஹஸன் அல்-பஸ்ரி (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறினார்கள்:
"அறிவை விலைக்கு வாங்க முடியும் என்றிருந்தால், அதைப் பெற மக்கள் தங்களுக்குள் கடுமையாகப் போட்டியிட்டிருப்பார்கள். அப்படியிருக்க, தனது செல்வத்தைச் செலவழித்து அந்த அறிவையே சீரழித்துக்கொள்பவனின் நிலை எவ்வளவு ஆச்சரியமானது!"
ஒருவன் எவ்வாறு தனது உள்ளத்தின் கடிவாளத்தை போதைப்பொருட்களிடம் ஒப்படைத்து, நஷ்டமடைந்தவர்களில் ஒருவனாக மாற சம்மதிக்கிறான்?
அவன்,
لَا يَعْرِفُ مَعْرُوفًا، وَلَا يُنْكِرُ مُنْكَرًا، إِلَّا مَا أُشْرِبَ مِنْ هَوَاهُ
"தனது மனஇச்சைக்கு ஒத்தவற்றைத் தவிர, நன்மையை நன்மையென அறியாதவனாகவும், தீமையைத் தீமையென வெறுக்காதவனாகவும் ஆகிவிடுகிறான்." (முஸ்லிம்)
போதைப்பொருட்கள் மனிதனை முற்றிலும் ஆட்கொண்டு, அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்தும் அவனை மறக்கச் செய்கின்றன.
அவை அவனது குடும்பத்தின் மீது துன்பத்தையும் வேதனையையும் சுமத்துகின்றன. மகிழ்ச்சியின் இடத்தில் கவலையையும், அன்பின் இடத்தில் பகைமையையும் வெறுப்பையும் உருவாக்குகின்றன.
இதனைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوقِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْخَمْرِ وَالْمَيْسِرِ وَيَصُدَّكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ
"மது மற்றும் சூதாட்டத்தின் மூலம் உங்களிடையே பகைமையையும் வெறுப்பையும் விதைக்கவும், அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுக்கவும்தான் ஷைத்தான் விரும்புகிறான்." (அல்குர்ஆன் 5:91)
பகுத்தறிவு உடையவன், தன்னைத்தானே அழிவுக்கு உட்படுத்த மாட்டான்; தனது நற்பெயரைக் கெடுத்துக்கொள்ள மாட்டான்; தனது செல்வத்தை வீணடிக்க மாட்டான்; தனது பிள்ளைகளைப் புறக்கணிக்க மாட்டான்; தனது குடும்பத்தைச் சீர்குலைக்க மாட்டான்.
குறிப்பாக நபி ﷺ அவர்கள் கூறிய இந்த எச்சரிக்கையை கேட்ட பிறகு:
كَفَى بِالْمَرْءِ إِثْمًا أَنْ يُضَيِّعَ مَنْ يَعُولُ
"ஒருவன் தன் பொறுப்பில் உள்ளவர்களைப் புறக்கணிப்பதே அவனுக்குப் பெரும் பாவமாகப் போதுமானது." (அபூ தாவூத்)
குடும்பம் என்பது பாதுகாப்பு அரணும், அமைதியின் புகலிடமும் ஆகும்.
பிள்ளைகள் தங்கள் வீட்டில் முன்மாதிரியான பெற்றோர்களையும், இதயத்தை நிரப்பும் அன்பையும், அறிவை வளர்க்கும் பயனுள்ள உரையாடல்களையும் காணாவிட்டால், அவர்கள் தீய நண்பர்களின் சகவாசத்தை நாடத் தொடங்குவார்கள்.
இதனால்தான் நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
الرَّجُلُ عَلَى دِينِ خَلِيلِهِ
"ஒருவன் தனது நெருங்கிய நண்பனின் வழியிலேயே (மார்க்கம், பண்பு, வாழ்க்கைமுறை) இருப்பான்." (அபூ தாவூத்)
எனவே, உங்கள் பிள்ளைகளின் மீது அக்கறை கொள்ளுங்கள்.
அவர்களின் நடத்தைகளைக் கவனமாகக் கண்காணியுங்கள்.
அவர்கள் பேசுவதைப் பொறுமையாகக் கேளுங்கள்.
அவர்களின் ஓய்வு நேரத்தைப் பயனுள்ள செயல்களில் ஈடுபடுத்துங்கள்.
அவர்களுக்கு நல்ல கல்வியையும் நற்பண்புகளையும் அளித்து, நேர்வழியில் வளர்க்க உங்களால் இயன்ற அனைத்தையும் செய்யுங்கள்.
அவர்கள் உங்கள் தோள்களில் சுமத்தப்பட்ட அமானிதம் (இறைநம்பிக்கை ஒப்படைப்பு); நீங்கள் பொறுப்பேற்க வேண்டிய ஒரு மாபெரும் பொறுப்பு.
நோய் வந்த பின் சிகிச்சை செய்வதை விட, அது வராமல் தடுப்பதே சிறந்தது.
No comments:
Post a Comment