Sunday, 21 June 2026

வீரமரணத்தை விரும்பிய வீரமறவர்கள்!

அண்ணலாரின் அருமைத் தோழர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்ளும்பொழுது தங்கள் ஈமானைப் புதுப்பித்துக்கொள்வர்.

அவர்கள் வீரமரணம் அடைவதில் அலாதி ஆர்வம் கொண்டிருந்தனர். இதனை இறைமறை இவ்வாறு இயம்புகிறது:

مِنَ الْمُؤْمِنِیْنَ رِجَالٌ صَدَقُوْا مَا عَاهَدُوا اللّٰهَ عَلَیْهِ ۚ فَمِنْهُمْ مَّنْ قَضٰی نَحْبَهٗ وَمِنْهُمْ مَّنْ یَّنْتَظِرُ ۖؗ وَمَا بَدَّلُوْا تَبْدِیْلًا

முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டனர். அவர்களில் சிலர் (வீரமரணம் அடைய வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தனர். வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை. (சூரா அல் அஹ்ஸாப் 33:23)

அனஸ் பின் நள்ரு (ரழி) என்ற நபித்தோழருக்கு பத்ருப் போரில் பங்கெடுக்க முடியாமற்போனது. அவருக்கு அது குறித்த கவலை எப்பொழுதும் இருந்துகொண்டே இருந்தது.

அவருக்குப் போரில் பங்கெடுக்க அடுத்த வாய்ப்பு வந்தது. வீராவேசத்துடன் உஹதுப் போரில் கலந்துகொண்டார்.

போர்க்களத்தில் அவர் விரைவாக சென்று கொண்டிருந்ததைக் கண்ட ஸஅத் பின் மாலிக் (ரழி) அவரிடம், “எங்கே செல்கிறீர்?” என்று கேட்டார்.

அதற்கு அனஸ் பின் நள்ரு (ரழி) இவ்வாறு பதிலளித்தார்: “சுவனத்தின் வாடையை நுகர்வதற்காக! அதனை உஹதின் அடியிலேயே நான் காண்கிறேன்.”

வீரம் பொங்க வீறு கொண்டு போர்க்களத்தில் உட்புகுந்தவர், எதிரிகளைக் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தார். எதிரிகளின் வெட்டுப் பட்டு வீரமரணம் அடைந்தார்.

போர் முடிந்த பின்னர், நபித்தோழர்கள் கொல்லப்பட்டவர்களின் உடல்களைத் தேடியபொழுது இவரை யாரென்று அடையாளம் காண முடியவில்லை. அந்த அளவுக்கு உடல் முழுவதும் வெட்டுப் பட்டுக் கிடந்தார்.

அவருடைய சகோதரிதான் இறுதியில் அவரைக் கண்டுபிடித்தார். அவருடைய கை விரல்களைக் கொண்டு அவரை அடையாளம் கண்டு, நபித்தோழர்களிடம் அறிவித்தார்.

இவர் தொடர்பாகத்தான் மேற்கண்ட இறைவசனம் இறக்கப்பட்டது. இவரைப் போன்று நபிகளாரின் சிறிய தந்தையான ஹம்ஸா (ரழி) உட்பட 70 நபித்தோழர்கள் உஹதுப் போரில் வீரமரணம் எய்தினார்கள்.

இந்த அருட்பேறு கிடைக்காத வேறு சிலர் அதனை எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர். அதனைத்தான் அல்லாஹ் அவ்வசனத்தின் பிற்பகுதியில் வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர். (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை என்று குறிப்பிடுகிறான்.


No comments:

Post a Comment