Saturday, 24 February 2018

ஹாசினியின் தந்தையின் கதறல்



ஹாசினி கொலைவழக்கின் தீர்ப்பைக் கேட்ட பின் அவளது புகைப்படத்தைப் பார்த்து அவளின் தந்தை கதறி அழுததைக் கண்ட பொழுது எனக்கு குஜராத் நினைவுக்கு வந்தது. ஹாசினியையாவது காமக் கொடூரன் தஷ்வந்த் கடத்திக்கொண்டு போய் சீரழித்து கொன்றான். தன் கண் முன்னே நடக்காவிட்டாலும் தன் மகள் எப்படியெல்லாம் துடிதுடித்து இறந்திருப்பாள் என்றெண்ணி ஹாசினியின் தந்தை கதறுகிறார் என்றால் குஜராத்தில் இனப்படுகொலை நடந்தபொழுது தாய், தந்தையர் கண் முன்னே ஹிந்துத்துவ ஃபாசிச பயங்கரவாதிகள் பெண்களைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்து எரித்துக் கொன்றதைப் பார்த்து எப்படி துடிதுடித்திருப்பார்கள் அந்தப் பெற்றோர்கள். இன்று நினைத்தாலும் நெஞ்சமெல்லாம் நடுநடுங்குகிறதே... அந்த இனப்படுகொலையைச் செய்ய அனுமதித்து, காவல்துறையின் கைகளைக் கட்டிப்போட்டு, நடப்பவையை வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும் என்று உத்தரவு போட்டவர் இன்று அரியணையில்! இப்படிப்பட்ட இழி நிலைக்கு இன்று இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இப்படி நம்பிக்கையிழந்து நெஞ்சம் விம்மும் நேரத்தில்தான் பாப்புலர் ஃப்ரண்ட் சேர்மன் இ. அபூபக்கர் ஸாஹிப் அவர்கள் பிப் 17, 2018 பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தில் திரூரில் ஆற்றிய உரை செவிகளில் ரீங்காரமிடுகிறது:
“கேரளத்திற்கும் சங்பரிவார்கள் ரதயாத்திரையுடன் வருகிறார்கள். எனினும், இங்கு நான் ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். ஏதேனும் ஒரு சமூகத்தின் அமைதிக்கு மட்டும் பங்கம் விளைவிக்கும் சூழல் கேரளாவில் ஏற்படாது என்று நம்புகிறோம். ஏதேனும் ஒரு பிரிவினரின் ரத்தம் மட்டும் வீதிகளில் ஓடாது என்றும் நம்புகிறோம்” என்ற வார்த்தைகள் வாழும் முஸ்லிம்களுக்கு வலுவான நம்பிக்கையை ஊட்டுகின்றன.

சாஸ்திரி வாங்கிய ஃபியட் கார்



மிகவும் எளிமையாக வாழ்ந்த இந்தியாவின் இரண்டாவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரிக்கு 1964-65ல் தனது குடும்பத் தேவைக்காக ஒரு கார் வேண்டிய அவசியம் வந்தது. அன்று பெயரும், புகழும் பெற்று விளங்கிய ஃபியட் கார் வாங்குவது என்று முடிவெடுத்தார்.

அன்றைய ஃபியட் காரின் விலை ரூ. 12,000. இவருக்கு வங்கியில் ரூ. 7000 மட்டுமே இருந்தது. மீதிப் பணம் ரூ. 5000ஐ பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடனாக சாஸ்திரி பெற்று ஃபியட் கார் வாங்கினார். கார் எண் DLE 6.

ஆனால் எதிர்பாராவிதமாக 1966ம் ஆண்டு தாஷ்கண்ட் சென்றிருந்தபொழுது சாஸ்திரி இறந்து விட்டார். காருக்கு வாங்கிய கடனை அடைக்காமல் சாஸ்திரி இறந்துவிட்டதால் கடனை அடைக்குமாறு சாஸ்திரியின் மனைவி லலிதா சாஸ்திரிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி நோட்டீஸ் அனுப்பியது.

தனக்கு வந்த பென்ஷன் தொகையை வைத்து லலிதா சாஸ்திரி அந்தக் கடனை அடைத்தார். இதே பஞ்சாப் நேஷனல் வங்கியில்தான் இன்று 11,300 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது. அந்தக் கார் இன்று சாஸ்திரியின் நினைவு இல்லத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

என் பெயர் ஆஸாத்!

இந்திய விடுதலைக்கு 25 ஆண்டுகளுக்கு முன் 1922ல் சிந்து மாகாணம் மட்லி நகரில் ஒரு சிறுவன் ஆங்கிலேயருக்கு எதிராக புரட்சியைத் தூண்டும் விதத்தில் ஆவேசமாக மக்களிடம் பேசுகிறான். விடுதலை உணர்வைத் தூண்டும் அந்த மழலைக் குரல் ஒலிக்கும் இடமெல்லாம் மக்கள் திரளாகக் கூடினர். தகவல் ஆங்கிலேயருக்கு செல்கிறது. அந்த 11 வயதுச் சிறுவனைக் கைது செய்து இன்று பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத் நகர நீதிமன்றத்தில் நிறுத்துகின்றனர். அச்சிறுவன்தான் கைர் முகம்மது.
நீதிமன்ற கூண்டிற்குள் தலை மட்டும் வெளியே தெரியும்படி நின்ற கைர் முகம்மதுவைப் பார்த்து ஆச்சரியப்பட்ட நீதிபதி விசாரணையைத் தொடங்குகிறார்.
நீதிபதி: உன் பெயர் என்ன?
கைர்: "ஆஸாத்" ('விடுதலை' என்று பொருள். கைரிடம் இருந்து உறுதியுடன் வெளிவந்த பதில் நீதிபதியை நிமிர்ந்து உட்கார வைத்தது.)
நீதிபதி: சரி... உன் தந்தையின் பெயர் என்ன?
கைர்: "இஸ்லாம்!"
நீதிபதி: உன் ஜாதி எது?
கைர்: "ஒத்துழையாமை!" (கைரின் பதில்களால் சற்றே எரிச்சல் அடைந்த நீதிபதி தொடர்ந்து கேட்கிறார்...)
நீதிபதி: உனது தொழில் எது?
கைர்: "அரசுக்கு எதிராகப் புரட்சியைத் தூண்டுவது" (ஒரு முதியோனுக்குரிய கம்பீரத்துடன் பதிலளிக்கிறான். புரட்சியைத் தூண்டுவது (Sedition) என்பது அன்று பெரிய குற்றம், ராஜதுரோகம்.)
நீதிபதி: உன் பிணையாள் (Surety) யார்?
கைர் : "என் பிணையாள் அல்லாஹ் ஒருவன்தான்"
(இப்பதிலைக் கேட்டு அதிர்ந்து போன நீதிபதி சிறுவன் என்பதால் சற்று இரக்கத்துடன்...)
நீதிபதி: உன் செயலுக்கு நீ மன்னிப்பு கோருகிறாயா?
கைர்: "ஒரு குற்றமும் செய்யாத நான் எதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும்? நான் ஓர் இந்தியக் குடிமகன் என்ற நிலையில் என் கடமையைத்தானே செய்தேன்?"
(என்று தார்மீக உணர்வுடன் அவன் நீதிபதியைத் திருப்பிக் கேட்க... மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டதால் கைருக்கு சில மாதங்கள் சிறைத் தண்டனையை நீதிபதி வழங்குகிறார்.)
சிறுவன் கைர் முகம்மதுவின் பதில்களில் வெளிப்பட்ட ஆன்மீகப் பிடிப்பும் விடுதலை உணர்வும் நம்மை ஆச்சரியத்துடன் அள்ளிக்கொண்டு போகிறது.
(டாக்டர் பீ. ஹாமிது அப்துல் ஹை (அபூஹாரிஸ்), நீதி விசாரணை. சிந்தனைச்சரம், அக்டோபர் 1997)

கதர் ஆடை என்ற பெயர் எப்படி வந்தது?




“என் தோள்களின் மீது இரண்டு சிங்கங்கள் அமர்ந்திருக்கின்றன” என்று காந்திஜியால் வருணிக்கப்பட்ட அலீ சகோதரர்களின் தாயாரான ஹாஜியா ஆலாஜி பானு என்ற ஃபீயம்மாள் தான், கைராட்டையில் நூற்ற நூலால் நெய்யப்பட்ட ஆடைக்கு ‘கதர்’ என்று பெயரிட்டவர்.
தன் கையால் நெய்த துணியைக் காந்திஜிக்கு அளித்து, “இதனைக் கத்ராக (கௌரவமாக) ஏற்றுக் கொள்ளுங்கள்” என்றார். அன்றிலிருந்துதான் அந்த ஆடைக்கு ‘கதர் ஆடை’ என்ற பெயர் வந்தது.
சுதேசி இயக்கத்தின் கலாச்சார அடையாளமான துணிக்கு ‘கதர்’ என்று பெயரிட்டவர் ஒரு முஸ்லிம் தாய் என்ற பெருமை நம் விடுதலைப் போராட்ட வரலாற்றுக்கு உண்டு.

Monday, 19 February 2018

“இடப்பெயர்ச்சி என்பது வளர்ச்சியல்ல என்பதை பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும்!” - வஸதா சாய்பாபா புதிய விடியலுக்கு அளித்த பேட்டி

மஹாராஷ்ட்ரா மாநிலம் கட்சிரோலி மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒன்று டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் ஜி.என். சாய்பாபா அவர்களுக்கு கடந்த மார்ச் 7ம் தேதி ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது. சக்கர நாற்காலியில் வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் 90% மாற்றுத் திறனாளியான பேரா. சாய்பாபாவுக்கு மின்னணு ஆதாரங்களின் அடிப்படையில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்புச்) சட்டம் என்ற யுஏபிஏ கொடூரச் சட்டத்தின் 13, 18, 20, 38, 39 ஆகிய பிரிவுகளின் கீழும், இந்திய தண்டனைச் சட்டத்தின் 120பி பிரிவின் கீழும் அந்த அமர்வு நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அளித்துள்ளது.

நமது புதிய விடியல் சிறப்பு செய்தியாளர் தன்வீர் இக்பால் பேரா. சாய்பாபா அவர்களின் மனைவி திருமதி வஸதா சாய்பாபா அவர்களை நேரில் சந்தித்து உரையாடினார். அந்தப் பேட்டியின் விவரம் வருமாறு:

பு.வி.: பேரா. சாய்பாபா அவர்களுக்கு கட்சிரோலி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு பற்றி என்ன கூறுகிறீர்கள்?

வஸதா: ஆயுள் தண்டனை என்பது அதிர்ச்சியை அளித்தது. முற்றிலும் எதிர்பாராதது. வழக்கு நடந்துகொண்டிருந்த பொழுது அரசுத் தரப்பு வழக்கறிஞரால் சாய்பாபாவுக்கெதிராக மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு ஒரு ஆதாரத்தைக் கூட கொண்டு வர முடியவில்லை. மஹாராஷ்ட்ரா வரலாற்றிலேயே குற்றம் சுமத்தப்பட்ட அத்தனை பேருக்கும் ஆயுள் தண்டனையின் அத்தனை பிரிவுகளின் கீழும் தண்டனை அளிக்கப்படுவது இதுவே முதல் முறை.

நீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்ட 23 சாட்சிகளில் 22 பேர் போலீஸ்காரர்கள். மீதமுள்ள ஒரே ஒருவர் ஒரு நாவிதர். அந்த நாவிதரும் கூட போலீஸின் ஆளே. அதனை அவரே அமர்வு நீதிமன்ற நீதிபதியிடம் தன்னை சாட்சி சொல்லும்படி போலீஸ்தான் வற்புறுத்தியது என்று கூறினார்.

2014ல் டெல்லி பல்கலைக்கழக வடக்கு வளாகத்திலுள்ள எங்கள் வீட்டில் காவல்துறையின் சோதனை நடந்தது. அப்பொழுது கணிணியின் நிலைவட்டு (ஹார்ட் டிஸ்க்) கைப்பற்றப்பட்டது. அது உட்பட சில மின்னணு ஆதாரங்களையே அதிகபட்ச ஆதாரங்களாகக் கொண்டு சாய்பாபாவுக்கு இந்தத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. எங்கள் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆதாரம் முத்திரை வைக்கப்படாததால் மிக எளிதாக அதில் மாற்றங்களைச் செய்யலாம். சாய்பாபா மாவோயிஸ்டுகளுடன் பிரகாஷ் என்ற பெயரில் வேலை செய்தாராம். சாய்பாபா பிரகாஷ் என்ற பெயரில் வேலை செய்ததற்கு ஒரு ஆதாரம் கூட சமர்ப்பிக்கப்படவில்லை. மேல்முறையீட்டில் மேல் நீதிமன்றங்களில் அவர் விடுதலை செய்யப்படுவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பு.வி.: ஏன் இப்படிப்பட்ட வழக்கு சாய்பாபாவின் மேல் கட்சிரோலி நீதித்துறை எல்லைக்குள் தொடுக்கப்பட்டது?

வஸதா: முதலில் காவல்துறை 2013 செப்டம்பரில் எங்கள் வீட்டை சோதனையிட்டது. மஹாராஷ்ட்ராவில் அஹேரியில் திருடப்பட்ட பொருளைத் தேடியெடுப்பதுதான் அதன் நோக்கமாக இருந்தது. அது நடந்து 9 மாதங்களுக்குப் பிறகு சாய்பாபா கைது செய்யப்பட்டார். 2014ம் ஆண்டு மே 9ம் தேதி டெல்லி பல்கலைக்கழத்தில் ஒரு பரீட்சை மையத்திலிருந்து அவர் திரும்பிக்கொண்டிருந்த பொழுது கைது செய்யப்பட்டார். சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டமான யுஏபிஏ சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

2014ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி, பாம்பே உயர்நீதிமன்றம் நாக்பூர் சிறையில் மோசமாகிக்கொண்டு வரும் அவரது உடல்நிலை குறித்த அறிக்கைகளின் அடிப்படையில் மூன்று மாத பிணை வழங்கியது.

பு.வி.: 2014ல் சாய்பாபா கைது செய்யப்பட்டதை ‘அது ஒரு கடத்தல்’ என்று சாய்பாபா வர்ணித்திருந்தார். அதனை விவரிக்க முடியுமா?

வஸதா: மே 9ம் தேதி தவுலத் ராம் கல்லூரியில் அமைந்துள்ள பல்கலைக்கழக மதிப்பீட்டு மையத்தின் தலைமைத் தேர்வு மேற்பார்வையாளராக சாய்பாபா நியமிக்கப்பட்டார். மதிய உணவு இடைவேளையில் தனது காரில் சாய்பாபா வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். பல்கலைக்கழக விளையட்டரங்கத்தின் அருகிலுள்ள வளைவில் திரும்பும்பொழுது திடீரென்று 45 முதல் 50 பேர் காருக்கு முன்பாக வந்தனர். காரை நிறுத்தினர். சில நொடிகளில், கார் ஓட்டுனரை ஒருவன் இழுத்து வெளியே தள்ளி விட்டு, காரினுள் அமர்ந்தான். சாலை வழிப்பறியாக இருக்கலாம் என்றுதான் சாய்பாபா எண்ணினார். ஆனால் அவர்கள் காரை சிவில் லைன்ஸ் காவல் நிலையத்திற்கு ஓட்டிச் சென்றனர். சாய்பாபாவை காரிலேயே இருக்கும்படி உத்தரவிட்ட அவர்கள் அவரது கைபேசியைப் பிடுங்கினர். தேர்வு வினாத் தாள்களையும் பிடுங்கினர். அதன்பிறகுதான் அவர்கள் 50 பேரும் காவல்துறை அதிகாரிகள் என்று சாய்பாபாவுக்குத் தெரிய வந்தது. அவர்கள் சாதாரண உடைகளில் வந்த மஹாராஷ்ட்ரா காவல்துறை, ஆந்திரா காவல்துறை, மத்திய உளவுத்துறை, சிறப்புப் பிரிவு காவல்துறை ஆகியவற்றின் அதிகாரிகள்.

சாய்பாபாவை ஒரு மேஜிஸ்திரேட்டின் முன்பு ஆஜர் படுத்தாமல், விசாரணைக்காக விண்ணப்பிக்காமல் அவர் நாக்பூருக்கு விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். சாய்பாபாவின் சக்கர நாற்காலியைத் தள்ளிக்கொண்டு வந்த பணியாளரின் அலைபேசி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை செல்லும்பொழுது சாய்பாபா எங்களைத் தொடர்பு கொண்டார்.

பு.வி.: சாய்பாபாவின் உடல்நிலை எப்படி உள்ளது? பிணையில் வெளிவரும் முன் சிறையில் எப்படி அவர் சமாளித்தார்?

வஸதா: 2014ல் அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து அவரது இடது கையை அவரால் தூக்கவே முடியாத நிலையில் உள்ளார். நாக்பூருக்குச் செல்லும் வழியில் அவரது சக்கர நாற்காலி உடைந்து விட்டது. அப்பொழுது போலீஸ் கான்ஸ்டபிள்கள் மணல் மூட்டையை அள்ளுவது போல் அவரைத் தூக்கியிருக்கின்றனர். நாக்பூர் சிறையில் அவரது தசைகள் சிதிலமடைந்து வருவதைக் கண்டறிந்த மருத்துவர்கள் உடனடியாக அவருக்கு தசைகளுக்கான நரம்பியல்-உடற்கூறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தனர். சிறையில் சாய்பாபாவுக்கு மேலைநாட்டுப் பாணியிலான கழிவறை கொடுக்கப்படவில்லை. காவலர்கள் சாய்பாபாவின் தோள்களைப் பிடித்துக்கொள்ள, அவர் இந்திய கழிவறையை மிகவும் சிரமப்பட்டு பயன்படுத்தினார். இது அவரது எலும்புகளைப் பிணைக்கும் தசைநார்களைப் பாதித்தது. நரம்புகளும் பாதிப்படைந்தன. அவை சிதிலமடையத் தொடங்கின. சாய்பாபாவின் தண்டுவடமும் சேதமடைந்தது. அவரது விலா எலும்புகள் நுரையீரலை உந்தித் தள்ள ஆரம்பித்தன. சாய்பாபாவுக்கு உடனடியாக பித்தப்பையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது.

பு.வி.: அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்ட பின்னர் அவரது வேலை என்னவாயிற்று? உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறீர்கள்? குடும்பச் செலவுகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?

வஸதா: 2014ல் மஹாராஷ்ட்ரா கட்சிரோலி காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் அவர் ஆர்.எல்.ஏ. கல்லூரியிலிருந்து பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். நாங்கள் மூன்று பேர் அவரைச் சார்ந்து வாழ்கிறோம். நான், சாய்பாபாவின் அம்மா, எங்கள் 19 வயதுடைய மகள் ஆகியோரே அந்த மூவர். சாய்பாபாவை பணியிடைநீக்கம் செய்த பின்னர், டெல்லி பல்கலைக்கழகம் எங்களை எங்கள் வடக்கு கட்டட வளாகத்திலிருந்த வீட்டை காலி செய்யுமாறு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தது. ஆதலால் வேறு வழியில்லாமல் நாங்கள் அருகிலுள்ள ஒரு வாடகை வீட்டுக்கு குடிபெயர்ந்தோம். வழக்கு செலவுகளுக்காகவும், இன்னபிற அன்றாடச் செலவுகளுக்காகவும் சில நண்பர்கள் உதவி செய்கிறார்கள். நிறைய கடன்கள் உள்ளன. எங்களது முக்கிய வருமானம் என்பது சாய்பாபாவின் சம்பளமே. இப்பொழுது அவர் பணியிடைநீக்கத்தில் இருப்பதால் மூன்றில் ஒரு பகுதி சம்பளமே எங்களுக்குக் கிடைக்கிறது.

பு.வி.: எந்த நீதிமன்றத்திலாவது அவருக்கு குற்ற வழக்குகள் எதுவும் நிலுவையில் உள்ளனவா?

வஸதா: இந்த வழக்கு தவிர்த்து வேறு எந்த வழக்கும் அவர் மீது இல்லை. அவர் ஒரு பேராசிரியர். அவர் கல்லூரியில் வகுப்பு எடுப்பவர். அநீதிக்கெதிராக அவர் ஜனநாயக வழியில் குரல் கொடுப்பார். ஆனால் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட அசீமானந்தா போன்ற குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் ஆர்எஸ்எஸ்ஸுடன் பின்னிப் பிணைந்தவர்கள். ஆர்எஸ்எஸ் பாஜக மூலமாக ஒரு பதிலி அரசை இங்கே நடத்திக்கொண்டிருக்கிறது. அந்த அரசோ பெருநிறுவனங்களுக்குச் சாதகமான அரசு. தேசத்தின் கனிம வளங்களை இந்தப் பெருநிறுவனங்கள் சுரண்டுகின்றன.

சாய்பாபாவின் வழக்கை ஏதோ தனிப்பட்ட வழக்காக காண முடியாது. இது ஒரு தொடரின் எச்சமே. இது பினாயக் சிங் முதல் கோபாட் கண்டி வரை தொடர்கிறது. இதற்கு முன் பினாயக் சிங்கைக் கைது செய்தார்கள். அவர் ஒரு மருத்துவர். ஆதிவாசிகளுக்கு நடக்கும் மனிதஉரிமை மீறல்களுக்கெதிராக அவர் குரல் கொடுத்தார். அவர்களுக்கு மருத்துவ உதவிகளும் செய்தார். அவரை மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்தினார்கள். கோபாட் கண்டி சிபிஐ (மாவோயிஸ்ட்) கட்சியின் உறுப்பினராக இருப்பதால் அவரை யுஏபிஏ சட்டத்தில் கைது செய்தார்கள்.

ஒரு புறம், தடை செய்யப்பட்ட அரசியல் நம்பிக்கைகளைக் கொண்ட தனிப்பட்டவர்களை குற்றமயப்படுத்துவதற்காக காட்டுமிராண்டித்தனமான சட்டங்களைப் பயன்படுத்துகிறார்கள். இன்னொரு புறம், அரசின் கொள்கைகளுக்கெதிராக கேள்வி கேட்போரின் குரலை ஒடுக்குகிறார்கள். ஆப்பரேஷன் கிரீன் ஹன்ட் போன்றவை மூலமாக பழங்குடியினரின் மேல் நடைபெறும் மனிதஉரிமை மீறல்களுக்கெதிராக குரல் கொடுப்பவர்களை வேட்டையாடுகிறார்கள். ஆதிவாசிகளை இடம் பெயரச் செய்கிறார்கள். இந்த அநீதிக்கெதிராக குரல் கொடுப்பவர்களை மாவோயிஸ்ட் என்கிறார்கள்.

பு.வி.: சாய்பாபா வழக்கில் வந்துள்ள தீர்ப்புக்கெதிராக மேல்முறையீடு செய்துள்ளீர்களா?

வஸதா: டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர். கிலானி, சத்திகரைச் சார்ந்த மருத்துவர் பினாயக் சென் ஆகியோரின் வழக்குகளில் நமக்கு முன்னோடி உள்ளது. சாய்பாபா மீது குற்றஞ்சாட்டியது போன்றே தேசத்துரோகம் உட்பட பல குற்றச்சாட்டுகள் இந்த இருவரின் மீது சுமத்தப்பட்டன. ஆனால் உயர்நீதிமன்றங்களில் அவர்கள் விடுவிக்கப்பட்டார்கள். நாங்கள் நாக்பூர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம். சாய்பாபா அனைத்து வழக்குகளிலிருந்தும் குற்றமற்றவராக விடுவிக்கப்படுவார் என்ற முழுமையான நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

பு.வி.: தற்போதைய நீதித்துறை பற்றிய தங்கள் கருத்து என்ன?

வஸதா: தற்பொழுது மக்களின் மனங்கள், சிந்தனைகள், பேச்சுகள் முதலியவற்றைக் கட்டுப்படுத்த அரசு விரும்புகிறது. சாய்பாபாவின் வழக்கு மருத்துவர் பினாயக் சென்னின் வழக்கைப் போன்றதே. பினாயக் சென்னின் வழக்கிலும் காவல்துறை உறுதியான ஆதாரங்களைத் தர முடியாமல் தோற்றுப் போனது. மக்கள் விரோத கொள்கைகளை, அரசு இழைக்கும் அநீதிகளை மக்களிடம் வெளிச்சம் போட்டுக் காட்டுபவர்களை நீதித்துறையைப் பயன்படுத்தி ஒடுக்கப் பார்க்கிறது. சாய்பாபா 90% இயலாமையில் உள்ளவர். இந்த நிலையில் உள்ளவரால் யாருக்கு என்ன கெடுதி செய்து விட முடியும்? மத்திய பாஜக அரசுக்கெதிராக தங்கள் குரல்களை உயர்த்துபவர்களைக் கண்டு அது அஞ்சுகிறது என்பது தெளிவு. ஆதலால் நீதித்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது. பேரா. சாய்பாபா போன்ற அப்பாவி மக்களை மாவோயிஸ்ட் என்று முத்திரை குத்தி பொது மக்களின் அனுதாபத்தைப் பெற்று விடாதவாறு மீடியாவின் ஒரு பகுதியும் செயல்படுகிறது.

பு.வி.: சமூகத்திற்கும், தேசத்திற்கும் என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள்?

வஸதா: பெருநிறுவனங்களின், பன்னாட்டு நிறுவனங்களின் கட்டளைப்படி மக்களுக்கெதிரான, ஜனநாயகத்திற்கு முரணான கொள்கைகளைத் திணிப்பதில் மத்திய மாநில அரசுகள் நீதித்துறைக்கு அதிகமான அழுத்தங்கள் கொடுக்கின்றன. இந்த நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்க மக்களின் குரல்களை ஒடுக்குவதற்கு அரசுகள் முனைகின்றன. மத்திய பாஜக அரசு ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்கு நேரடியாகவே காய்களை நகர்த்துகின்றன.

நீதிமன்றத்தை கண்ணியப்படுத்தும் முகமாக, தனது மோசமாகி வரும் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் சாய்பாபா இத்தனை வருடங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். ஒரு மனைவி என்ற அடிப்படையில் அவருக்காக நீதி வேண்டி உயர் நீதிமன்றங்களுக்குச் சென்று நான் போராடுவேன். நான் ஜனநாயகவாதிகள், மக்கள் அமைப்புகள், அறிவார்ந்தவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்து மக்களுக்கும் அரசின் ஜனநாயகத்திற்கு முரணான செயல்களைக் கண்டிக்குமாறு வேண்டுகோள் வைக்கிறேன்.

தமிழில்: MSAH

புதிய விடியல்

Wednesday, 14 February 2018

“பேராசிரியர் பெருமானார் (ஸல்)” - நூலாய்வுரை




காயல் பட்டினத்தைச் சார்ந்த ஆலிமா சித்தி லரீஃபா அவர்கள் உம்மு நுமைரா என்ற புனைப் பெயரில் எழுதிய நூலே “பேராசிரியர் பெருமானார் (ஸல்)”.

அகிலத்தாருக்கெல்லாம் அழகிய முன்மாதிரியாகத் திகழ்பவர்கள் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள். குறிப்பாக ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அவர்களே சூப்பர் ஹீரோ. எனவேதான் முஸ்லிம்கள் அண்ணலாரை உயிரினும் மேலாக நேசிக்கின்றனர்.

அகிலத்தாருக்கு அல்லாஹ்வின் அருள்மறையைப் போதிக்க வந்த அண்ணலார் அவர்கள் ஆசிரியராக மிளிர்ந்தார்கள் என்பதில் வியப்பில்லை. ஆனால் அனைத்துத் திறமைகளையும் கொண்ட, கற்றுத் தருதலின் அனைத்து முறைமைகளையும் அக்குவேறு ஆணிவேராக அறிந்திருந்த பேராசிரியராகத் திகழ்ந்துள்ளார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும் நூல்தான் “பேராசிரியர் பெருமானார் (ஸல்)”.

“அண்ணல் நபி (ஸல்) அவர்களை ஓர் ஆன்மீகத் தலைவராய், சிறந்த ஆட்சித் தலைவராய், வீரமும், விவேகமும் நிறைந்த போர்த் தளபதியாய், உற்ற தோழராய், அன்புக் கணவராய், ஆருயிர்த் தந்தையாய், கண்ணியமிகு மனிதராய் எனப் பல்வேறு பரிமாணங்களில் நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் நாமெல்லாம் அதிகம் அறிந்திராத சிறந்த ஆசிரியராய் அவர்களை உங்களிடம் அறிமுகம் செய்வதே இந்நூலின் நோக்கமாகும்” என்று நூலாசிரியர் எழுதிய முன்னுரையின் முதல் வாசகமே நூலின் நோக்கத்தை நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

“சுமார் பதினைந்து ஆண்டுகளாக ஓர் ஆசிரியையாக பணியாற்றிய வகையில், அண்ணலாரின் நடைமுறைகளை நபிமொழிகள் வடிவிலாக நெருங்கி நின்று பார்க்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றதினால் பேராசிரியர் பெருமானார் (ஸல்) அவர்களைப் பார்த்து பிரமித்துப் போனேன். நான் ஆச்சரியப்பட்ட, பிரமித்த, இரசித்த விஷயங்களை உங்களோடும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தால் இந்நூலை எழுத விழைந்தேன்” என்று நூலாசிரியர் குறிப்பிட்டதைப் படிக்கும்பொழுது நமக்கும் சுவாரசியம் ஒட்டிக் கொள்கிறது.

30 அத்தியாயங்களாக இந்நூலைத் தொகுத்துள்ளார் நூலாசிரியர். ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு கற்றல் முறையை அழகுற விளக்குகிறது.

கேட்பவர்களை சடைவடையச் செய்யாதிருத்தல், எளிமையான மொழி நயம், கேட்பவர்களின் அறிவுக்கும், புரிதல் திறனுக்கும் ஏற்றவாறு பேச்சுகளை அமைத்துக் கொள்ளுதல், வினாக்கள் மற்றும் விவாதங்கள் மூலம் புரிய வைத்தல், உதாரணங்களைப் பயன்படுத்தி விளக்குதல், கோடுகள் மற்றும் வரைபடங்கள் மூலமாக விளக்குதல், … என்று நீளும் பொருளடக்கப் பட்டியலைப் படிக்கும்போதே எழும் ஆர்வத்திற்கு அணை போட முடியவில்லை.

நம் எதிர்பார்ப்புகளை ஏமாற்றாமல் திருப்தியுடன் பூர்த்தி செய்கிறார் நூலாசிரியர். தான் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு தலைப்புக்கும் பொருத்தமான ஹதீஸ்களைத் தேர்ந்தெடுத்து அதற்குரிய இடங்களில் சரியாகப் பொருத்தியிருக்கிறார்.

“அநாதைகளை ஆதரிப்பவரும் நானும் மறுமை நாளில் இவ்வாறு (நெருக்கமாக) இருப்போம்” என்று தமது சுட்டுவிரலையும், நடு விரலையும் நபி (ஸல்) அவர்கள் இணைத்துக் காட்டினார்கள்” என்ற நபிமொழியை மையப் பொருளாக வைத்து “கையசைவுகள் மற்றும் சைகைகள் காட்டி விளக்குதல்” என்ற அத்தியாயத்தைத் தீட்டியிருக்கிறார் நூலாசிரியர்.

“அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தச் செத்த ஆட்டை விட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்” என்ற அண்ணலாரின் அருள்மொழியை அடிப்படையாக வைத்து “கண் முன்னால் காணும் சூழ்நிலைகளைப் பயன்படுத்திக்கொள்ளுதல்” என்ற அத்தியாத்தை வரைந்துள்ளார் நூலாசிரியர்.

இப்படி ஒவ்வொரு அத்தியாயமும் அழகிய உதாரணங்களாக அண்ணலாரின் அருள்மொழிகளைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

நபிகளார் முக்கியமான சில வார்த்தைகளை ஏன் மூன்று முறை கூறினார்கள், கதைகளையும், முற்கால நிகழ்வுகளையும் அவ்வப்பொழுது ஏன் கூறினார்கள், சிலரிடம் மட்டும் ஏன் தனிக் கவனம் செலுத்தினார்கள் போன்ற கேள்விகளுக்கு தகுந்த விளக்கத்தைத் தருகிறது இந்நூல்.

அவசியமான இடங்களில் அண்ணலார் கோபமும், கண்டிப்பும் காட்டியது, தோழர்களிடம் நிதானமாகவும், மென்மையாகவும் நடந்துகொண்டது, செய்திகளை ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்திக் கூறியது, படிப்படியாகக் கற்றுக் கொடுத்தது, தோழர்களின் திறமைகளைப் பாராட்டியது, அவர்களை உற்சாகப்படுத்தியது, தோழர்களின் அறிவைப் பரிசோதிப்பதற்காக வினா எழுப்பியது, வெட்கப்படக்கூடிய விஷயங்களை கற்பிக்கும்போது நாசூக்காக நளினமாகக் கூறியது, தோழர்களின் தேடுதல் திறனை அதிகரிப்பதற்காக சில விஷயங்களை மூடலாகக் கூறியது என்று பல நிகழ்வுகள் விளக்கங்களுடன் விரிகிறது இந்நூலில்.

“மதிப்பெண்கள் அதிகமாய் எடுப்பவர்களை நல்ல மனன சக்தி உள்ளவர் என்று வேண்டுமானால் கூறலாம். நல்ல அறிவுடையவர் என்று நிச்சயமாய் கூறிவிட முடியாது” என்று ஓரிடத்தில் நூலாசிரியர் நச்சென்று குறிப்பிடுவது இன்றைய கல்வி முறையின் முகத்தில் அறைவது போல் உள்ளது.

“நானும் ஓர் ஆசிரியராகவே அனுப்பப் பட்டுள்ளேன்” என்று உரக்கச் சொன்ன உத்தம நபி (ஸல்) அவர்களின் கற்பித்தல் முறை எவ்வாறெல்லாம் இருந்தது என்பதன் ஒரு வடிவம் மூளைக்குள் முளைத்து விடுகிறது நூலைப் படித்து முடிக்கும்பொழுது.

சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு அதிகமதிகம் அவசியம் என்ற காலத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு நூலாசிரியர் இன்னும் பல நூல்களைப் படைத்து தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கிட வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

அச்சுப் பிழைகளின்றி, மிக நேர்த்தியாக அச்சுச்கோர்ப்பு செய்து, அழகிய வகையில் பக்கங்களையும் வடிவமைத்திருக்கிறார்கள் தாருஸ் ஸலாஹ் பதிப்பகத்தார். அவர்கள் எடுத்துக்கொண்ட சிரத்தை ஒவ்வொரு பக்கத்திலும் தெரிகிறது. பாராட்டுகள்.

அனைத்து முஸ்லிம்களும் அவசியம் படித்திட வேண்டிய நூல். குறைந்தபட்சம் அனைத்து ஆசிரியர்களும் அவர்களின் தகைமைகளை வளர்த்திட அவசியம் அள்ளிப் பருக வேண்டிய நூல்.

புதிய விடியல், டிசம்பர் 16-31, 2017

Tuesday, 5 December 2017

முஹம்மத் ஸாதிக் அலீ அவர்கள் எழுதிய ‘எளிய முறை கணிதம்’ - எனது அணிந்துரை




என் அருமை நண்பர் முஹம்மத் ஸாதிக் அலீ அவர்களின் கன்னி முயற்சி இது. அதுவும் புதிய முயற்சி. சமுதாயத்திற்குத் தேவையான அரிய முயற்சி.

நூலாசிரியர் முஹம்மத் ஸாதிக் அலீ அவர்கள் இது போன்று பல துறைகளில் பல முயற்சிகளை எடுத்துக்கொண்டு இருப்பவர். நேர நிர்வாக நிபுணர்.

துபையில் ஒரு முறை இவர் நேர மேலாண்மை வகுப்பு எடுக்கும்பொழுதுதான் நான் முதன் முதலாக இவரைப் பார்த்தேன். அப்பொழுது எந்த அறிமுகமும் இல்லை. இருந்தும் நான் மின்னஞ்சலில் கேட்டவுடன் பவர் பாயிண்ட் பிரசன்டேஷனை உடனே அனுப்பி எனக்கு உதவினார்.

நான் “இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்” நூல் எழுதும் முயற்சியில் இருந்த நேரம் அது. அவர் அனுப்பித் தந்தது எனக்கு மிக்க உதவியாக இருந்தது. பல புதிய பார்வைகளைத் தந்தது.

நூலாசிரியர் முஹம்மத் ஸாதிக் அலீ அவர்களைக் கண்டு பல முறை நான் வியந்திருக்கிறேன். தன் தொழிற்பணிப் பளுவுக்கு இடையில் நேரத்தை நன்கு நிர்வாகம் செய்து சமுதாயப் பணிகளைச் செய்வதோடு, சமுதாயத்திற்குப் பலனளிக்கும் வகையில் இம்மாதிரி புதிய முயற்சிகளை அவர்கள் செய்து கொண்டிருப்பது என்னை மாதிரி சமூகப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு உள்ளபடியே உத்வேகம் அளிக்கிறது.

எளியமுறை கணிதம் மூலம் மாணவச் செல்வங்களுக்கு மிக எளிதாக கணிதம் பயில ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்நூல். கணித வாய்ப்பாடு என்பது பல மாணவர்களுக்கு கடினமாக இருக்கும். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு வாய்ப்பாடுகளை எளிய முறையில் மனப்பாடம் செய்வதற்கு நிறைய உத்திகளைச் சொல்லும் இந்நூல் ஒர வரப்பிரசாதமாக அமையும் இன்ஷா அல்லாஹ்.

நூலாசிரியரின் இந்நூல் பெரும் வெற்றி பெற்று, இதேபோன்று சமுதாயத்திற்குப் பலனளிக்கும் வகையில் பல நூல்களை அவர் எழுதிட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்.

M.S. அப்துல் ஹமீத்
19.03.2017
துபை

Thursday, 23 November 2017

கஃபூரின் கதை


கஃபூருக்கு திடீரென்று ஒரு செய்தி வருகின்றது:

‘‘இன்னும் 24 மணி நேரத்தில் நீங்கள் மரணமடைந்து விடுவீர்கள்!’’
எப்படியிருக்கும் கஃபூருக்கு?

(ஒரு பேச்சுக்குத்தான்! மரணத்தை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!)

இனி கஃபூருக்கு 24 மணி நேரம்தான் இருக்கிறது.

அவர் இந்த 24 மணி நேரத்தை எப்படி செலவழிப்பார்? ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.

நகரத்தில் அலைந்து திரிந்து ‘ஜாலியாக ஷாப்பிங்’ செய்து கொண்டிருப்பாரா? நண்பர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டிருப்பாரா? நல்ல ஆடை அணிந்து கண்ணாடி முன் நின்று அழகு பார்த்துக்கொண்டிருப்பாரா? என்ன செய்வார்?

சப்த நாடியும் ஒடுங்கி நல்ல பிள்ளையாகி விடுவார். அதுவரை இருந்த அலட்டல்களெல்லாம் அடங்கிப் போய் விடும். ஒரே ஓர் எண்ணம்தான் அவருள் எங்கும் வியாபித்திருக்கும். அது – அல்லாஹ்!

எங்கும் அல்லாஹ்! எதிலும் அல்லாஹ்!!

அவரது ஒவ்வொரு நொடியும் மதிப்பு மிக்கதாகிவிடும். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும், செய்யும் ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடியே இருக்கும்.

ஒரு நொடியைக் கூட அல்லாஹ்வின் ‘திக்ர்’ இல்லாமல் அவர் செலவழிக்கமாட்டார். ஒரு சிறு பாவத்தைக்கூட செய்யமாட்டார்.

இப்பொழுது நமது நிலையை எடுத்துக்கொள்ளுங்கள். அது கஃபூரை விட மோசமானது.

ஆம்! கஃபூருக்காவது 24 மணி நேரம் என்று தெளிவாகத் தெரிந்துவிட்டது. நமக்குத் தெரியுமா? நாம் எப்பொழுது மரணமடையப் போகிறோம் என்று யாருக்காவது தெரியுமா? அடுத்த நிமிடமே நமக்கு மரணம் வரலாம்.
அதனால்தான் நாம் ஒவ்வொரு தொழுகையையும்; தொழும்பொழுது இதுதான் நமது இறுதித் தொழுகை என்று எண்ணித் தொழ வேண்டும் என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் இயம்பினார்கள்.

‘‘மகிழ்ச்சியை மண் மூடிப் புதைக்கும் ஒன்றை அதிகமாக நினைவு கூருங்கள். (அதுதான்) மரணம்!’’ என்று அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

‘‘கப்றுக் குழியில் இருக்கும் மனிதர்களோடு உங்களையும் எண்ணிப் பாருங்கள்’’ என்று மேலும் அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ)

நாளை மறுமையில் அல்லாஹ்வின் முன் நிறுத்தப்படும்பொழுது, முதல் நிலைக் கேள்விகள் அனைத்தும் நமக்கு அருளப்பட்ட அளவிலா மதிப்புடைய நேரத்தைச் சுற்றித்தான் இருக்கும்.

‘‘நீங்கள் கணக்கு கேட்கப்படும் முன் உங்களை நீங்களே கணக்கு கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் மதிப்பிடப்படும் முன் உங்களை நீங்களே மதிப்பிட்டுக்கொள்ளுங்கள். இன்று நீங்கள் உங்களைக் கணக்கு பார்த்துக்கொண்டால், நாளை நடக்கும் கேள்வி கணக்கு இலகுவாக இருக்கும். அந்த நாளில் (காட்சி தருவதற்காக) உங்களை அலங்கரித்துக்கொள்ளுங்கள்: ‘‘அந்த நாளில் நீங்கள் (அல்லாஹ்வின் முன்) கொண்டு வரப்படுவீர்கள். (அப்பொழுது) உங்களது ஒரு ரகசியமும் மறைக்கப்படாது (69:18)’’ என்று உமர் (ரலி) அவர்கள் உரைத்தார்கள்.

(‘இஸ்லாமியப் பார்வையில் நேர நிர்வாகம்’ நூலிலிருந்து.)

Monday, 20 November 2017

சிறிய அமல்...! பெரிய பலன்..!! அல்லாஹ்வின் கருணை விசாலமானது!!!


உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் முழுமையான முறையில் உளூ செய்து விட்டு,
أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّداً عَبْدُهُ وَرَسُولُهُ

அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு ரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதிமொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்.” (முஸ்லிம்)
திர்மிதீயில் இடம் பெற்ற ஹதீஸில் கீழ்க்கண்ட துஆவும் சேர்த்து கூறுமாறு வந்துள்ளது:
اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ

அல்லாஹும்மஜ்அல்னீ மினத் தவ்வாபீன வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன் (யாஅல்லாஹ், பாவமன்னிப்பு தேடுபவர்களில் ஒருவனாக என்னை ஆக்கிடுவாயாக! பரிசுத்தமானவர்களில் ஒருவனாக என்னை ஆக்கிடுவாயாக! (திர்மிதீ)

சொர்க்கம் கிடைப்பதென்பது சாதாரணமானதல்ல; அதுவும் எட்டு வாசல்கள் திறந்து வைக்கப்பட்டு அழைக்கப்படுவது என்றால்…! அந்த பாக்கியம் இந்த மிகச் சிறிய அமலால் கிடைத்து விடுகிறது. அதற்காக எந்தத் தொகையும் செலவழிக்க வேண்டியதில்லை. எந்தச் சிரமும் படவேண்டியதில்லை.
இந்தச் சிறிய நற்செயலுக்குப் போய் இவ்வளவு பெரிய சொர்க்கத்தை அல்லாஹ் வழங்கிடுவானா என்று நாம் சந்தேகப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அல்லாஹ்வின் கருணை மிக விசலானமானது. அதையும் இந்த நபிமொழியே நமக்கு உணர்த்திக் காட்டுகிறது.

திருக்குர்ஆனில் நரகத்தைப் பற்றியும் அதன் வாசல்களின் எண்ணிக்கை பற்றியும் இப்படி வந்துள்ளது: “நிச்சயமாக, (ஷைத்தானைப் பின்பற்றும்) அவர்கள் அனைவருக்கும் நரகம்தான் வாக்களிக்கப்பட்ட இடமாகும். அதற்கு ஏழு வாசல்கள் உண்டு. அவ்வாசல்கள் ஒவ்வொன்றும் ஒதுக்கிக் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பிரிவினருக்கும் ஆகும்.” (15:44)

சொர்க்கவாசிகளுக்கு சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும் என்று திருக்குர்ஆனில் (39:73) பொதுவாக வந்துள்ளது. ஆனால் சொர்க்க வாசல்களின் எண்ணிக்கையைப் பற்றி திருக்குர்ஆனில் எங்கும் கூறப்படவில்லை. எனினும் நபிமொழிகளில் சொர்க்க வாசல்களின் எண்ணிக்கை எட்டு என வந்துள்ளது. இந்த நபிமொழியிலும் எட்டு வாசல்கள் திறக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

நரகத்தின் வாசல்களை ஏழாக அமைத்த அல்லாஹ், சொர்க்கத்தின் வாசல்களையும் ஏழு என அமைக்கவில்லை. மாறாக, ஒன்றை அதிகமாக்கி, எட்டு என அமைத்து, எனது கோபத்தை விட கருணையே விசாலமானது; எனது அருளே அதிகமானது என்பதை உணர்த்துகிறான். எனவே அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பெற்று சொர்க்கம் செல்ல இந்த இலகுவான துஆவை உளூவிற்குப் பிறகு ஓதி வருவோமாக!

Sunday, 19 November 2017

சம்மதமா... சம்மதமா...

அஸ்ஸாமில் போடோ தீவிரவாதிகள் அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றொழித்ததை மையமாக வைத்து எழுதப்பட்ட பாடல்.

(சம்மதமா... சம்மதமா... என்ற மகஇக பாடலின் ராகம்)

சம்மதமா... சம்மதமா... நீ
இந்தியன் என்றால் சம்மதமா...
சொல்லிது உன்னால் முடியுமா - நீ
உண்டு உறங்கும் விலங்கினமா - இல்லை
கண்டுங்காணாத கல்லினமா...
(சம்மதமா...)

அஸ்ஸாமில் நடந்த அக்கிரமம் - அதைக்
கேட்டால் நெஞ்சம் விம்முதடா...
சொந்த மண்ணின் மைந்தர்களை
வந்தேறிகள் என்று சொன்னானடா...
போடா தீவிரம் வந்ததடா...
அடவாடித்தனம் செய்ததடா...
சொந்த மண்ணில் அகதியடா - அது
வெந்த புண்ணில் ஈட்டியடா...
தேசமாடா... இது தேசமாடா... - முஸ்லிம்
தேகங்கள் என்ன மோசமாடா...
குடித்த பாலின் ஈரம் கசிய
மடிந்த மழலையின் கோரமடா...
மாற்றம் வரத்தான் போகுதடா - இது
பாப்புலர் ஃப்ரண்டின் காலமடா...
(சம்மதமா...)

முன்பொரு காலம் இருந்ததடா - நினைத்தால்
முஸ்லிமைக் கொல்வது நடந்ததடா...
இன்னொரு காலம் பிறக்குதடா...
இழிந்த சூழ்நிலை மாறுதடா...
ஏந்தல் நபியின் போதனையை
ஏற்ற முஸ்லிமின் எழுச்சியடா...
போதுமடா... இது போதுமடா... - நாங்கள்
திருப்பிக் கொடுக்கும் காலமடா...
குடித்த பாலின் ஈரம் கசிய
மடிந்த மழலையின் கோரமடா...
மாற்றம் வரத்தான் போகுதடா - இது
பாப்புலர் ஃப்ரண்டின் காலமடா...
(சம்மதமா...)