Tuesday, 7 November 2017

அகங்காரம்

1912ம் ஆண்டு, ஏப்ரல் 10ம் தேதி இங்கிலாந்திலிருந்து 'டைட்டானிக்' கப்பல் கிளம்பியபோது, 'கடவுளே நினைத்தாலும் இந்தக் கப்பலை மூழ்கடிக்க முடியாது' என்று இந்தக் கப்பலின் கேப்டன் எட்வர்ட் ஜான் ஸ்மித் இறுமாப்புடன் சொன்னார். இந்தப் பெருமையுடனும், அகங்காரத்துடனும் கிளம்பிய ‘உலகிலேயே நகரும் பிரம்மாண்ட அரண்மனை’ என்று பறைசாற்றப்பட்ட அந்தக் கப்பல், வெறும் ஜந்தே நாளில் பனிப் பாறையில் மோதி தனது முதல் பயணத்திலேயே சமாதியானது. அந்தக் கப்பலில் பயணம் செய்த 2223 பேரில் 1517 பேர் நடுக்கடலில் கடுங்குளிரில் மூழ்கி மாண்டனர்.
இது வரலாற்றில் ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன் எத்தனையோ அகங்காரம் கொண்டோர் அவமானப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றனர். ‘அன ரப்புகுமுல் அஃலா’ என்று கொக்கரித்த சிம்மாசன அகம்பாவம் தலையில் முறுக்கேறிய ஃபிர்அவ்ன், நீரை வரவழைப்பதே நான்தான் என்று எக்களித்த ஃபிர்அவ்ன் அந்த நீரிலேயே மூழ்கிப் போனான். செல்வச் செருக்கில் தன்னை விட்டால் ஆளில்லை என மார் தட்டிய காரூன் போன்றவர்கள் இறைத் தண்டனைக்காளாகி சிறுமைப்பட்டு மாண்டனர்.
பெருமைக்குரியவன் அல்லாஹ் மட்டுமே. அவன் தன்னை ‘முதகப்பிர்‘ (பெருமைக்குரியவன்) என்று அழைக்கிறான். அனைத்துப் பெருமைகளுக்கும் சொந்தக்காரனான அல்லாஹ் மட்டுமே முதகப்பிர். எதிலும் முழுமை, அளவின்மை, வரையறையின்மை, கட்டுப்பாடின்மை என்பது அவனுக்கு மட்டுமே உடையது. ஆகவே அவன் பெருமைப்பட முழுத் தகுதியும் அருகதையுமுடையவன்.
அவனுடைய படைப்பினங்கள் ஒன்றுக்கும் அந்த உரிமை இல்லை. ஒரு முஃமினின் அத்தியாவசிய பண்பு பணிவு. எவனது உள்ளத்தில் அனைத்துப் பெருமைகளுக்கும் உரிமை படைத்தவன் வல்ல அல்லாஹ் ஒருவன்தான் என்ற எண்ணம் மேலோங்குகிறதோ அவன் எப்பொழுதும் பணிந்து நடப்பான். செருக்கு கொண்டால் இம்மையிலும், மறுமையிலும் தனக்கு ஏற்படுகின்ற பாதிப்புகளை உணர்ந்து வாழ்வான்.
பணிவு மனிதனை உயர்த்தும். ஆணவம் மனிதனைத் தாழ்த்தும். ‘எவர் அல்லாஹ்வுக்கு பணிந்தாரோ அவரை அல்லாஹ் உயர்த்துவான். மேலும் எவர் பெருமை கொண்டாரோ அவரை அல்லாஹ் தாழ்த்துவான்’என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அல்-முஃஜம் அல்-அவ்ஸத்)
“நரகவாசிகளைப் பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு, “பெருமையும் ஆணவமும் கொண்ட ஒவ்வொருவனும் நரகவாசியே” என்று விளக்கமளித்தார்கள். (அறிவிப்பாளர்: ஹாரிஸா பின் வஹ்பு, நூல்: புகாரீ)
“பணிவு கண்ணியவான்களின் குணங்களைச் சார்ந்தது. இறுமாப்பு நீசர்களின் குணங்களைச் சார்ந்தது. மனிதர்களில் அந்தஸ்தால் உயர்ந்தவர் தனது அந்தஸ்தைப் பாராதவராவார். அவர்களில் சிறப்பால் உயர்ந்தவர் தனது சிறப்பைப் பாராதவராவார்’என்று இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
இறைவனை நாம் புகழ்வதால் இறைவனுடைய தகுதி கிஞ்சிற்றும் உயர்ந்து விடப் போவதில்லை. மாறாக, நமது தகுதிதான் இவ்வுலகிலும் மறுவுலகிலும் உயரும்.
நமக்கு எது கிடைத்தாலும் 'அல்ஹம்துலில்லாஹ்' என்று திருப்தியுறும் மனப்பாங்கை வளர்த்துக் கொண்டால், நமக்குக் கிடைக்கும் எந்த வெற்றியும் நம்மால் ஆனது அல்ல, இறைவன் நம் மீது கொண்ட கருணையினாலேயே என்ற பரந்த மனப்பான்மைக்கு வந்து விட்டால் ஆணவம், அகங்காரம், பெருமை என்று அனைத்துமே நம்மை விட்டு பறந்து விடும்.
“எவரது உள்ளத்தில் அணுவளவு மமதை உள்ளதோ அவர் சுவர்க்கம் புக மாட்டார்” என்று எம்பெருமானார் (ஸல்) அவர்கள் அருளினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம்)
‘பெருமை என்பது உண்மையை மறுப்பதும் மனிதர்களை அற்பமாகப் பார்ப்பதுமாகும்’ என்று பெருமைக்கு விளக்கம் அளித்தார்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: முஸ்லிம்)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்பொழுதும் பணிவுடனேயே வாழ்ந்தார்கள். பணிவையே மக்களுக்கு போதித்தார்கள். அகங்காரம், பெருமை, கர்வம் போன்றவற்றைக் கொண்டு மக்களை எச்சரித்தார்கள். அவர்களின் பணிவு காரணமாக அல்லாஹ் அவர்களை ஈருலகிலும் உயர்த்தினான்.
எனவேதான் பெருமையை மனிதனுக்கு ஹராமாக்கியது இஸ்லாம். அதனைப் பாவமாகப் பார்ப்பதுடன் அதற்குத் தண்டனைகளையும் விதித்துள்ளது. பெருமைக்காரர்கைளையும், ஆணவக்காரர்களையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
மேலும் உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! மேலும் பூமியில் கர்வமாக நடக்காதே! நிச்சயமாக அல்லாஹ் பெருமையாக நடப்பவர், பெருமையடிப்பவர் எவரையும் நேசிப்பதில்லை. (அல் குர்ஆன் 31:18)

Sunday, 5 November 2017

நூல் வலம் - ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி 2017

நான் வாங்கிய நூல்கள்

நேற்று (04.11.2017) ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியைக் காண சென்றிருந்தேன். எப்பொழுதும் போல பிரம்மாண்டமான ஏற்பாடுகள். நேர்த்தியாக, கச்சிதமாக அனைத்தையும் செய்திருக்கிறார்கள். தொழுகைக்காக கீழ் தளத்திலும், மேல் தளத்திலும் பெரிய இடங்களை ஒதுக்கியிருக்கிறார்கள்.



இலட்சக்கணக்கான புத்தகங்களை எப்படி பார்வையிடுவது என்ற மலைப்பில் நகர்ந்தேன். அனைத்து கடைகளையும் நம்மால் ஒரே மூச்சில் பார்த்து விட முடியாது.



இந்திய பதிப்பகங்களின் கடைகள் அடங்கியுள்ள Hall No. 7க்குச் சென்றேன். ஒவ்வொரு கடையாக ஏறி புத்தகங்களைப் பார்வையிட ஆரம்பித்தேன். திடீரென்று எதிரில் புக் லேண்ட் பதிப்பகம் தென்பட்டது. சகோதரி ஜெசீலா பானு அவர்கள் முகநூலில் எழுதியது நினைவுக்கு வந்தது. அவரது நூல் இங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்று எழுதியிருந்தார்.



அங்குள்ள பணியாளரிடம், “தமிழ் நூல்கள் எங்கே இருக்கின்றன?’‘ என்று கேட்டேன். “இங்கே தமிழ் நூல்கள் கிடையாது” என்றார். நான் ஜெசீலா பானு அவர்களின் நூல் விவரத்தைச் சொன்னேன். அவருக்குத் தெரியவில்லை. அவர் இன்னொரு பணியாளரிடம் கேட்டார். அவர் உடனே அந்த நூலைக் காட்டித் தந்தார். “நம் நாயகம்” என்ற நூல். அதனை வாங்கி விட்டு அடுத்த கடைக்குள் நுழைந்தேன்.



தமிழ் நூல்கள் எங்காவது கண்ணுக்குத் தென்படுகிறதா என்றும் பார்த்துக்கொண்டே சென்றேன். எங்கும் தென்படுகிற மாதிரி தெரியவில்லை. லிபி பதிப்பகம் என்ற மலையாள நூல்கள் கடையில் எனக்குப் பிடித்த “இஸ்லாமும் நேர மேலாண்மையும்” என்ற மலையாள நூலை வாங்கினேன்.



அடுத்தடுத்த கடைகளுக்கு நகர்ந்தபொழுது தாருஸ்ஸலாம் பதிப்பகக் கடை (Darussalam International Islamic Bookshop - UAE) தென்பட்டது. இங்கே நல்ல நல்ல இஸ்லாமிய நூல்கள் கிடைக்குமே என்று உள்ளே நுழைந்தேன். அருமையான தலைப்புகளில் பல நூல்கள் அங்கே வீற்றிருந்தன. Strategies of Prophet Muhammad PBUH என்ற நூலை வாங்கினேன். அங்கே ஒரு மகிழ்ச்சி காத்திருந்தது. ஒரு பக்கத்தில் தமிழ் நூல்களை வைத்திருந்தார்கள்.



பின்னர் International Islamic Publishing House - Saudi Arabia கடைக்குள் நுழைந்தேன். அங்கும் அருமையான தலைப்புகளில் நூற்றுக்கணக்கான ஆங்கில நூல்கள் விரவிக் கிடந்தன. Psychology from the Islamic Perspective என்ற நூலை வாங்கினேன். அங்கும் இதர மொழி நூல்களை பிரிவு பிரிவாக வைத்திருந்தார்கள். எதிர்பார்த்தது போலவே TAMIL என்ற பெயர்ப்பலகையின் கீழ் சில தமிழ் நூல்கள் இருந்தன.



மலையாள பதிப்பக உலகின் ஜாம்பவான் DC Books பல கடைகளைப் போட்டிருந்தார்கள். கூட்டம் அங்கே அலை மோதியது. அங்கும் தமிழ் நூல்கள் இருக்கின்றனவாம் என்று என் நண்பர் முஹம்மது ஆதில் சொன்னதை வைத்து அங்கு சென்று தமிழ் நூல்களைத் தேடினேன். ஒன்றும் இல்லை. அங்குள்ள பணியாளர்களிடம் விசாரித்தபொழுது தமிழ் நூல்கள் இல்லை என்று சொன்னார்கள். ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் ஏராளமான நூல்கள் அங்கே இருந்தன.



வழக்கம் போல் மலையாள பதிப்பகங்கள் அதிகம் பங்கேற்றிருந்தன. அங்கெல்லாம் மலையாளிகளின் கூட்டம் அலைமோதியது. குடும்பத்துடன் வந்து தங்கள் பிள்ளைகள் விரும்பிக் கேட்கும் நூல்களை பெற்றோர்கள் வாங்கிக் கொடுத்துக்கொண்டிருந்தனர். ஆங்காங்கே தமிழ் ஒலிகளும் கேட்டன. தமிழ் குடும்பங்களும் வந்திருந்தார்கள்.



‘மாத்யமம்’ மலையாள நாளிதழ் கடை போட்டு, அன்றைய நாளிதழை இலவசமாக கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ‘மாத்ருபூமி’ மலையாள நாளிதளின் கடையையும் கண்டேன். ‘மீடியா ஒன்’ மலையாள தொலைக்காட்சியும் கடை போட்டு, மலையாள இளவல்களை செய்தி வாசிக்க வைத்து ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்தார்கள். மலையாள மக்கள் குதூகலத்துடன் அதனைக் கண்டு ரசித்துக்கொண்டிருந்தனர். மலையாள வானொலி பண்பலை Flowers FM கடையையும் காண நேர்ந்தது.



மலையாளிகளுக்கு வருடா வருடம் இது ஒரு பாக்கியமாகவே அமைந்துள்ளது. சொந்த நாட்டில் கூட அவர்கள் வாங்க முடியாத நூல்களையெல்லாம் அவர்கள் இங்கே சாதாரணமாக வாங்கலாம். கணிசமான மலையாள முஸ்லிம் பதிப்பக கடைகளும் காணக் கிடைத்தன. அமீரகத்திலுள்ள மலையாள வானொலி பண்பலைகளிலும் இந்தப் புத்தகக் கண்காட்சி குறித்த விளம்பரம் செய்யப்படுகிறது.



இதேபோன்று தமிழ் பதிப்பகக் கடைகள் எப்போது வரும் என்ற ஏக்கம் இதயத்துள் எழாமல் இல்லை. ‘இலக்கியச்சோலை’ பதிப்பகம் கடந்த வருடங்களில் ‘தேஜஸ்’ மலையாளப் பதிப்பகத்துடன் சேர்ந்து கடை போட்டிருந்தது. இந்த வருடம் சில காரணங்களால் ‘தேஜஸ்’ பதிப்பகம் கடை போடாததனால் ‘இலக்கியச்சோலை’ நூல்களும் இல்லாமல் போனது.



தமிழ் மக்கள் அதிகமாக இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வருகை புரிய வேண்டும். அவர்களின் வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும். அவர்களின் அதீதமான வருகையும், வாசிப்புப் பழக்கமும் மட்டுமே இனி வருங்காலங்களில் தமிழ் பதிப்பகத்தாரை இங்கே கடைகள் எடுப்பதற்கு தூண்டுகோலாக அமையும்.



இந்த ஏக்கத்துடன் நேரமாகிவிட்டதால் விடைபெற மனமில்லாமல் கண்காட்சியை விட்டு வெளியேறினேன். புத்தகக் கடலில் மூழ்கி மூச்சுத் திணறி நனைந்து வெளிவந்த உணர்வு.






Friday, 3 November 2017

யார் வெற்றியாளர்கள்?

வெற்றி.
அல்லாஹ் அருள்மறையில் 40க்கும் மேற்பட்ட
இடங்களில் பதிந்துள்ள சொல்.
தினமும் ஐவேளை பாங்கொலியின் மூலம்
வெற்றியின் பக்கம் அழைப்பு.
வெற்றியை விரும்பாதோர் எவருமிலர்.
வெற்றி வேண்டும் எல்லோருக்கும்.
வெற்றியின் வழிகள் என்னென்ன?

الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَۙ‏ 

(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (2:3)

وَالَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِمَۤا اُنْزِلَ اِلَيْكَ وَمَاۤ اُنْزِلَ مِنْ قَبْلِكَۚ وَبِالْاٰخِرَةِ هُمْ يُوْقِنُوْنَؕ‏ 

(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். (2:4)

اُولٰٓٮِٕكَ عَلٰى هُدًى مِّنْ رَّبِّهِمْ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏ 

இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள். (2:5)

வெற்றியின் முதல் படி இறைநம்பிக்கை.
மறைவானவற்றின் மீது விசுவாசம் வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும்.
அடுத்தது தொழுகையை நிலைநாட்டுதல்.
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தல்.

 ؕ فَالَّذِيْنَ اٰمَنُوْا بِهٖ وَعَزَّرُوْهُ وَنَصَرُوْهُ وَ اتَّبَـعُوا النُّوْرَ الَّذِىْۤ اُنْزِلَ مَعَهٗ ۤ‌ ۙ اُولٰۤٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ

எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள். (7:157)

அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிந்து வாழ்தல்.
அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகியிருத்தல்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا ارْكَعُوْا وَاسْجُدُوْا وَ اعْبُدُوْا رَبَّكُمْ وَافْعَلُوْا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُوْن ۚ‏ 

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும்: நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு, நன்மையே செய்யுங்கள். (22:77)

நாளை மறுமையில் முதல் கேள்வி தொழுகையைப் பற்றித்தான்.
அது நல்ல பதிலாக அமைந்தால் பின்னர் வரும் கேள்விகள் எளிதாக அமையும்.
அவன் வெற்றி பெற்றவனாவான்.

فَاٰتِ ذَا الْقُرْبٰى حَقَّهٗ وَ الْمِسْكِيْنَ وَابْنَ السَّبِيْلِ‌ؕ ذٰلِكَ خَيْرٌ لِّلَّذِيْنَ يُرِيْدُوْنَ وَجْهَ اللّٰهِ‌ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ‏ 

ஆகவே, உறவினர்களுக்கு அவர்கள் பாத்தியதையைக் கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (அவரவர்க்குரியதை கொடுத்து வருவீராக); எவர்கள் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும்; அவர்கள்தாம் (அவ்வாறு கொடுத்து வருபவர் தாம்) வெற்றியாளர்களாவார்கள். (30:38)

நற்கருமங்கள் செய்து நன்மைத் தட்டின் கனம் கூடினால்
வெற்றி.
நற்குணங்கள் வெற்றியை நல்கும்.

فَاذْكُرُوْۤا اٰ لَۤاءَ اللّٰهِ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ
‏ 
எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்” (என்றும் கூறினார்). (7:69)

அல்லாஹ் நமக்களித்த அருட்கொடைகளை எண்ணிப் பார்ப்பது வெற்றிக்கனியைப் பறித்துத் தரும்.
பயனுள்ள கல்வியை, அறிவைத் தேடினால் வெற்றி கிட்டும்.

03.11.2017 - இன்றைய அமீரக ஜும்ஆ உரையிலிருந்து.

Tuesday, 15 August 2017

இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு - சிறு தொகுப்பு


இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு இன்றியமையாததாக இருந்தது. தங்களுடைய பொருளாதாரத்தையும், உடல் உழைப்பையும் இந்திய விடுதலை இயக்கத்திற்கு முழுமையாக அர்ப்பணித்திருந்தனர் முஸ்லிம்கள்.

மௌலானா அபுல் கலாம் ஆசாத், ரபிக் அஹ்மத் கித்வாய், காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் போன்றவர்கள் இந்திய விடுதலை இயக்கத்தின் மிகப் பெரும் தலைவர்களாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், சுதந்திர இந்தியாவை கட்டமைப்பதிலும், ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டுவதிலும் பெரும் பங்காற்றினர்.

காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல்

முஹம்மது அலீ, ஷௌக்கத் அலீ, அபுல் கலாம் ஆஸாத் ஆகியோர் காந்தியடிகளின் ஆதரவுடன் துவக்கிய கிலாஃபத் இயக்கத்திற்குத் தமிழக முஸ்லிம்கள் பேராதரவு அளித்தனர்.  காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் இந்த இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றினார். ஆங்கில ஆட்சியை எதிர்த்து மாணவர்கள் கல்லூரிகளையும் படிப்பையும் துறக்க வேண்டும் என்ற காந்தியடிகளின் வேண்டுகோளை ஏற்று பி.ஏ படிப்பை இடையில் நிறுத்தினார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். கதர் மீது மிகுந்த அபிமானம் கொண்ட இவர் தனது திருமணத்தின் போது கரடுமுரடான கதர் ஆடைதான் அணிந்திருந்தார்.

குஞ்ஞாலி மரைக்காயர்

கடற்போர் பல செய்த தமிழ் மன்னர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் புகழ்ந்து உரைக்கின்றன. அம்மன்னர்களைப் போன்று கடற்போர் பல செய்தவர் குஞ்ஞாலி மரைக்காயர். ஆங்கிலேயர் நம் நாட்டை அடிமைப்படுத்துவதற்கு முன் இங்கு வந்து கால் பதித்த போர்ச்சுகீசியரை விரட்டியடிக்க கடற்போர்கள் செய்த குஞ்ஞாலி மரைக்காயர்தான் இந்திய விடுதலைப் போரின் முன்னோடி. கடற்போரில் சாகசங்கள் புரிந்த இந்த வீரத் தளபதியை வெற்றி கொள்ள முடியாத எதிரிகள் நயவஞ்சகமாகக் கொன்றனர்.

சிராஜ்-உத்-தவ்ளா

ஆங்கிலேயர் வணிகம் செய்ய வந்த காலந்தொட்டே அவர்களை ஆங்காங்கே எதிர்த்துக் கொண்டிருந்தவர்களில் முஸ்லிம்கள், முஸ்லிம் மன்னர்கள் கணிசமாக இருந்தனர். ஆங்கிலேயருக்கு நாட்டை ஆளும் எண்ணம் வந்துவிட்டதை முதலில் கணித்து அவர்களை எதிர்த்தவர் வங்காளத்தை ஆண்ட சிராஜ்-உத்-தவ்ளா ஆவார்.

சிப்பாய்க் கலகம்

முதல் இந்திய போராட்டம் என்று அறியப்படும் 1857-ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சியில் அதிகப்படியான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் அதிகப்படியானோர் தங்கள் உயிரையும் இழந்தனர்.

ஜாஃபர் அலீ

வட இந்தியாவில் நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது ஹியூவீலர் என்னும் ஆங்கிலேய அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். இப்புரட்சியில் கலந்து கொண்ட ஜாஃபர் அலீ என்பவர்தான் அவரைச் சுட்டுக் கொன்றார் என்ற தவறான தவகல் ஆங்கிலேய அதிகாரிகளுக்குத் தரப்பட்டது. ஜாபர் அலி கைது செய்யப்பட்டார். அவரை ஒரு தூணில் கட்டி வைத்து, சாட்டையால் அடித்தனர். அவரது உடலிலிருந்து கசிந்த இரத்தம் கீழே விரிக்கப்பட்டிருந்த ஈரப் பாயில் சிந்தி உறையாமல் ஈரமாக இருந்தது. பாயில் சிந்திய இரத்தத்தை நாவினால் சுத்தப்படுத்தும்படி ஜாஃபர் அலீயை சித்திரவதை செய்தனர். பாயை சுத்தம் செய்த போதும் சாட்டையால் அவரை அடித்தனர். இறுதியில் ஜாஃபர் அலீ ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார்.

மிர் நிசார் அலீ

1857ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்ப் புரட்சியின் போது டிட்டு மிர் மியான் என்று அழைக்கப்பட்ட மிர் நிசார் அலீ வஹாபிகளை ஒன்று திரட்டிக் கிளர்ச்சியில் ஈடுபடுத்தினார். கொல்கத்தா அருகே பல கிராமங்களை ஆங்கிலேயரின் அதிக்கத்திலிருந்து விடுவித்தார். பிரிட்டிஷ் தளபதி அலெக்சாண்டர் தலைமையில் இராணுவம் வந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் தொடுத்தது. இதில் 400 வஹாபியர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியின் முன்னணியில் இருந்த ரசூல் என்பவர் தூக்கிலிடப்பட்டார்.

ஆதம் ஜவேரி சகோதரர்கள்

இந்தியாவின் தந்தை என்றழைக்கப்படும் மகாத்மா காந்தியடிகள், தன்னுடைய சுயசரிதையான சத்தியசோதனையில், விடுதலை போராட்டத்திற்கான ஆரம்பக்காலத்தில் தனக்கு உறுதுணையாக இருந்த ஆதம் ஜவேரி சகோதரர்கள் குறித்து குறிப்பிடுகின்றார். அன்றைய தேதிக்கு சுமார் 150 கோடி சொத்துகளை சுதந்திரப் பணிக்காக இழந்திருந்தனர் இச்சகோதரர்கள்.

ஏ.ஆர். ஃபக்கீர் முஹம்மது ராவுத்தர் சேட்

தென் தமிழகத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் தன்னுடைய சுதேசி கப்பல் லட்சியத்தை அடைய பொருளாதாரம் மிகப்பெரும் தடையாக இருந்தது. அந்நேரத்தில், சுமார் இரண்டு லட்சம் மதிப்பிலான 8000 பங்குகளை வாங்கி வ.உ.சியின் நோக்கத்திற்கு உறுதுணையாக இருந்தவர் ஏ.ஆர். ஃபக்கீர் முஹம்மது ராவுத்தர் சேட் ஆவார்.

நேதாஜி படையில் கணிசமான முஸ்லிம்கள்

நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் உருவாக்கிய கடல் கடந்த இராணுவமான இந்திய தேசிய இராணுவத்தில் தளபதி பொறுப்பு முதற்கொண்டு பல்வேறு பதவிகளை முஸ்லிம்கள் அலங்கரித்திருந்தனர். நேதாஜி வியந்து போற்றும் அளவு அதிகப்படியான பொருளாதார உதவிகளையும் இஸ்லாமிய வணிகர்கள் அளித்தனர்.

உலமாக்களின் மார்க்க ஃபத்வா

மௌலானா என்றழைக்கப்படும் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள், சுதந்திர எண்ணங்களைத் தீவிரமாக விதைக்கும் வண்ணமாக, கதராடை அணியாத மணமகன் திருமணத்தில் தாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்று ஃபத்வா (மார்க்க தீர்ப்பு) அளித்திருந்தனர்.

ஃபக்கீர்களின் பங்கு

ஃபக்கீர்கள் எனப்படும் யாசகம் தேடுவோர் வீடு வீடாக சுதந்திரக் கீதங்களைப் பாடி மக்களின் விடுதலை எண்ணங்களைத் தீவிரப்படுத்தினர்.

திருமதி ஃபத்ருதீன் தியாப்ஜி

இந்திய மண்ணின் விடுதலைக்கு இஸ்லாமியப் பெண்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்திருந்தனர். சுதந்திர இந்தியாவின் தேசிய கொடியை வடிவமைத்தவர் திருமதி ஃபத்ருதீன் தியாப்ஜி ஆவார்.

குஷ்வந்த் சிங்கின் கூற்று

இஸ்லாமியர்களின் இத்தகைய அர்ப்பணிப்பினாலேயே, இந்திய விடுதலைப் போராட்டத்திற்கான முஸ்லிம்களின் பங்களிப்பு பற்றிக் குறிப்பிடும்போது எழுத்தாளர் குஷ்வந்த் சிங் பின்வருமாறு எழுதுகின்றார்: “இந்திய விடுதலைக்காகச் சிறை சென்றவர்களிலும், உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர்கள் அதிகமாகவே இருந்தனர். அவர்களது மக்கள்தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைப் போரில் மாண்டோர் எண்ணிக்கையின் விகிதாச்சாரம் அதிகமாகவே இருந்தது”. (இல்லஸ்டிரேட்டட் வீக்லி, 29-12-1975)

ஹாஜி ஷரீஅத்துல்லாஹ்

இந்தியா 1947ம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. ஆனால், அதற்கு முன்னரே சுதந்திரம் பெற்று விட்டோம் என்று மிகுந்த நம்பிக்கையுடனும், உறுதியுடனும் 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்' என்று பாடினார் பாரதியார். அந்த அளவுக்கு அவரது மனதில் நம்பிக்கை விதையை விதைத்தது ஹாஜி ஷரீஅத்துல்லாஹ் 1781ஆம் ஆண்டு தொடங்கிய பெராஸி இயக்கமும் அதன் பின் தோற்றுவிக்கப்பட்ட வஹாபி இயக்கமும் ஆகும் என்று கூறலாம்.

சையது அஹமது ஷஹீத்

வஹாபி இயக்கம் என்று வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படும் இயக்கத்தைத் தோற்றுவித்தவர் சையது அஹமது ஷஹீத் என்பவர் ஆவார். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராகப் பல போராட்டங்களை அந்த வஹாபி இயக்கம் நடத்தியது. வங்கத்தில் வரி கொடா இயக்கம் நடத்தி நாடியா மாவட்டத்தில் 24 பர்கனாக்களைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, இந்திய மக்கள் சுதந்திரத்தைச் சுவாசிக்க வழி வகுத்தது. சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று தீர்க்க தரிதனத்துடன் பாரதி பாடியதற்கு இந்த வரலாற்றுப் பிண்ணனிதான் காரணம் என்று யூகிக்க முடிகிறது.

கான் சாஹிப் என்ற மருதநாயகம்

ஒரு காலத்தில் ஆங்கிலேயருக்கு வேண்டியவராக இருந்து, பிறகு அவர்களுக்கு எதிராக மாறியவர் கான் சாஹிப். இவர் யூசுஃப் கான், நெல்லூர் சுபேதார், முஹம்மது யூசுஃப், கும்மந்தான், கம்மந்தான் சாஹிப் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார். யூசுஃப் கான் சாஹிப் மதுரையில் ஆங்கிலேயரின் கொடியைப் பீரங்கி வாயில் வைத்துச் சுட்டுப் பொசுக்கி விட்டு சுதந்திரப் பிரகடனம் செய்தவர். இவர் தொழுகை நடத்திக் கொண்டிருந்தபோது சொந்த நாட்டுத் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஆங்கிலேயர் அவரைத் தூக்கிலிட்டுக் கொன்றனர்.

ஷா அப்துல் அஜீஸ்

இந்தியாவைச் சுதந்திர நாடாகப் பிரகடனம் செய்த இஸ்லாமிய விடுதலை வீரர்களில் ஷா அப்துல் அஸீஸ் அல் தெஹ்லவியும் ஒருவர். பிரிட்டிஷ் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் இன்னல்கள் இழைத்து வருவதைக் கண்டு வேதனைப்பட்ட அவர் இந்தியாவை 'தாருல் ஹர்ப்' ஆகப் பிரகடனம் செய்தார். ஷா வலியுல்லாஹ்வின் மூத்த மகனாக 1746ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த தெஹ்லவி ஆங்கிலேயரை எதிர்க்க முஸ்லிம்களுக்கு இராணுவப் பயிற்சியளிக்கத் திட்டமிட்டிருந்தார். அத்திட்டம் நிறைவேறுவதற்கு முன்னரே காலமாகிவிட்டார். இவர் கூறியுள்ள மார்க்கத் தீர்ப்புகள் 'பத்வா' எனும் பெயருடன் இரண்டு பகுதிகளாக வெளிவந்துள்ளன.

ஹைதர் அலீ

18ஆம் நூற்றாண்டில் சிறந்த தளபதியாகத் திகழ்ந்தவர் ஹைதர் அலீ. இவர் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை எதிர்த்து நடத்திய போர் 'முதலாம் மைசூர் போர்' எனப்படுகிறது. ஹைதர் அலீயின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஆங்கிலேயர் தோற்று ஓடினர். ஆனால், இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயர் சூழ்ச்சி செய்து இவரைத் தோற்கடித்தனர்.

தீரன் திப்பு சுல்தான்

'மைசூர் புலி' திப்பு சுல்தானின் பெயரைக் கேட்டாலே ஆங்கிலேயரின் உடல்கள் நடுங்கும். இவர் ஹைதர் அலீயின் மகனாவார். இரண்டாம் மைசூர் போரில் இவரது பங்கு மகத்தானது. தன் தந்தையின் மறைவிற்குப் பின், ஆங்கிலேயரை எதிர்த்து இவர் போரில் ஈடுபட்டார்.

1790ஆம் ஆண்டு முதல் 1792ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மூன்றாம் மைசூர் போரில் திப்பு தோல்வியடைந்தார். தங்களுக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் கூறிய போது, திப்பு சுல்தான் 'முடியாது' என்று மறுப்புத் தெரிவித்தார். மதிப்பிற்குரிய இந்த வீரருக்கு ஒருவன் துரோகம் செய்தான்.  அதன் காரணமாக எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுக்கு திப்பு சுல்தான் இரையானார்.

வங்கத்துச் சிங்கங்கள்

வங்காளத்தில் 1776ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம் பக்கிரிகள் நடத்திய புரட்சியால் பிரிட்டிஷ் ஆட்சி கதிகலங்கி விட்டது. இந்தப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய சிராக் அலீயைப் பிடிக்க ஆங்கிலேயர்கள் எவ்வளவோ முயற்சித்தனர். தலைமறைவான அவரைக் கடைசி வரை ஆங்கிலேயர்களால் பிடிக்க முடியவில்லை.

முஃப்தீ இனாயத் அஹ்மது

தேடி வந்த முன்சீப் பதவியை உதறித் தள்ளி விட்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் முஃப்தீ இனாயத் அஹ்மது. உ.பி.யில் 1822ஆம் ஆண்டு பிறந்த இவர் நிகழ்த்திய தீப்பொறி பறக்கும் சொற்பொழிவுகள் மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டின.

இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு இவரைக் கைது செய்தது. இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. 'நீங்கள் புரட்சி செய்தது உண்மையா?' என்று நீதிபதி இவரிடம் கேட்டார். 'ஆம். அடிமை விலங்கை உடைத்தெறியப் புரட்சி செய்வது என்னுடைய கடமை என்று உணர்ந்து கொண்டேன். புரட்சி செய்தேன்' என்று முஃப்தி இனாயத் அஹ்மது துணிச்சலுடன் பதிலளித்தார். இவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

மௌலவி அஹ்மதுல்லாஹ் ஷா மதராஸி

தேச விடுதலைக்காக நாடு முழுவதும் துறவிக் கோலத்தில் சுற்றுப்பயணம் செய்து புரட்சிப் பிரச்சாரம் செய்தவர் மௌலவி அஹ்மதுல்லாஹ் ஷா மதராஸி. சென்னை நவாபின் வழிவந்தவரான இவர் கிழக்கு அயோத்தி எனப்படும் ஃபைசாபாத்தின் அதிபராக இருந்தவர். இவரது புரட்சிப் பிரச்சாரம் ஆங்கிலேயருக்கு ஆத்திரமூட்டியது. இவரைக் கைது செய்து ஃபைசாபாத் சிறையில் அடைத்தனர். புரட்சியாளார்கள் சிறைக் கதவை உடைத்து இவரை மீட்டு வந்தனர். இவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஆங்கிலேய அரசு அறிவித்தது.

தலைமறைவாக இருந்த மௌலவி அஹ்மதுல்லாஹ் ஷா மதராஸி அயோத்தி மன்னன் விரித்த வஞ்சக வலையில் சிக்கினார். அவரைக் காண யானைப் பாகனாக மாறுவேடத்தில் சென்ற போது, அயோத்தி மன்னனின் தம்பி பாவென் என்பவன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். 1858ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் தேதியன்று அவரது தலையை அயோத்தி மன்னன் வெட்டி ஆங்கிலேயரிடம் கொண்டு போய்க் கொடுத்து ஐம்பதினாயிரம் ரூபாய் பரிசைப் பெற்றான்.

டாக்டர் சைஃபுத்தீன் கிச்சுலு

இந்திய மக்களை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்கள் பல அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டு வந்தனர். அவற்றுள் மிகக் கொடுமையானது 'ரௌலட் சட்டம்'. இந்தச் சட்டத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் பெரும் கிளர்ச்சி மூண்டது. பஞ்சாபில் இக்கிளர்ச்சி மிகத் தீவிரமாக நடைபெறக் காரணமாக இருந்தவர் டாக்டர் சைஃபுத்தீன் கிச்சுலு.

இவரைப் பிரிட்டிஷ் இராணுவம் அமிர்தஸரசிலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த தர்மசாலா என்னும் இடத்திற்கு அழைத்துச் சென்றது. இதனை அறிந்த மக்கள் கொதிப்படைந்தனர். போலீஸ் ஆணையர் அலுவலகத்திற்கு அவர்கள் பெருந்திரளாகச் சென்றனர். அந்த மக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து சேதம் விளைவித்தனர். இதில் ராபின்சன், சார்ஜண்ட் ரௌலண்ட் என்னும் இரு ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர்.

வழக்கறிஞர் மக்பூல் மாமூத்

அப்போது மக்களை அமைதிப்படுத்திக் கொண்டிருந்த மக்பூல் மாமூத் என்னும் வழக்கறிஞரைப் போலீசார் கைது செய்தனர். ராபின்சன், ரௌலண்ட் ஆகியோரைக் கொன்றவர்கள் யார் என்று கூறும் படி அவரைச் சித்ரவதை செய்தனர். 'கொலையாளிகளை என்னால் அடையாளம் காட்ட முடியாது' என்று அவர் எழுதிக் கொடுத்தார். உடனே போலீசாரே சில பெயர்களை எழுதி, அவர்கள் குற்றவாளிகள் என்று வாக்குமூலம் தருமாறு அவரை வற்புறுத்தினர். 'எனக்கு மனசாட்சி உண்டு, பொய் சொல்ல மாட்டேன்' என்று அவர் உறுதியாகக் கூறிவிட்டார். மனசாட்சியுடன் நடந்து கொண்ட அவரது வக்கீல் சான்றிதழ் பறிக்கப்பட்டது.

முஹம்மது அக்ரம்

இந்தக் கலவரத்தின் போது ஈஸ்டன் என்னும் ஆங்கிலப் பெண்மணியைத் தாக்க முயன்றதாக முஹம்மது அக்ரம் என்பவர் கைது செய்யப்பட்டார். உண்மையில் அவர் ஈஸ்டனைத் தாக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. ஆனால் விசாரணையில் அவர் குற்றவாளி என்று கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன்

சட்டத்தை மீறி தண்டியில் உப்பு அள்ளிய காந்தியடிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலத்தில் வெற்றிகரமாக பொது வேலைநிறுத்தம் நடத்தியவர் அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன். அப்போது அந்த மாநிலத்தில் பல இடங்களில் கலவரங்கள் நடந்தன. இக்கலவரங்களைத் தூண்டிவிட்டதாக அப்துல் ரசூல் குர்பான் ஹுஸைன் மீது வழக்குத் தொடரப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1931ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதியன்று ஏர்வாடா சிறையில் அவர் தூக்கிலிடப்பட்டார்.

அஷ்ஃபகுல்லாஹ் கான்

ககோரி ரயில் கொள்ளை வழக்கில் புரட்சி வீரர் அஷ்ஃபகுல்லாஹ் கான் மீது விசாரணை நடைபெற்றது. 'நீ முஸ்லிம். மற்ற புரட்சிக்காரர்கள் இந்துக்கள். அவர்களைக் காட்டிக் கொடுத்தால் உனக்கு நிபந்தனையற்ற விடுதலை கிடைக்கும். ஏராளமான பணமும் தரப்படும்' என்றெல்லாம் கூறி வெள்ளை அதிகாரிகள் ஆசை காட்டினார்கள். இந்த ஆசை வார்த்தைகளையெல்லாம் கேட்ட அஷ்ஃபகுல்லாஹ் கான் பாறை போல் அசையாமல் நின்றார். தங்கள் பிரித்தாளும் சூழ்ச்சி பலிக்காமல் போகவே பிரிட்டிஷார் இவருக்குத் தூக்குத் தண்டனை கொடுத்தனர்.

அவர் தூக்கில் ஏற்றப்பட்ட நாளன்று திருக்குர்ஆனைக் கழுத்தில் தொங்கப் போட்டார். ஹாஜிகளைப் போன்று 'லப்பைக் லப்பைக்' என்று கூறிக் கொண்டிருந்தார். தாமே சுருக்குக் கயிற்றை எடுத்துக் கழுத்தில் மாட்டிக் கொண்டார். அஷ்ஃபகுல்லாஹ் கான் உ.பி.யில் உள்ள ஷாஜஹான்பூரில் பிறந்தவர்.

தென்னாட்டு வேங்கைகள்

தென்னகத்தின் பல பகுதிகளிலிருந்து ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் புரட்சியாளர்கள் கிளர்ச்சி செய்தனர். 1800ஆம் ஆண்டு இக்கிளர்ச்சிக்கு கோவையில் தலைமை தாங்கி நடத்தியவர் முஹம்மது ஹசன். ஓசூரில் தலைமை வகித்து நடத்தியவர் ஃபத்தேஹ் முஹம்மது.

முஹம்மது ஹசன்

ஆங்கிலேயப் படை முஹம்மது ஹசனைக் கைது செய்தது. கிளர்ச்சி பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள ஆங்கிலேயர் அவரை சித்திரவதை செய்தனர். புரட்சியாளர்களின் திட்டங்கள் ஆங்கிலேயருக்குத் தெரிந்து விடக் கூடாது என்று கருதிய முஹம்மது ஹசன் தன் குரல்வளையை அறுத்துக் கொண்டு இந்திய விடுதலைக்காகத் தன் இன்னுயிரை அர்ப்பணித்துக் கொண்டார்.

மக்கான் கான், மஹபூப்தீன்

குடகுப் பகுதியில் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்திய மக்கான் கான், மஹபூப்தீன் ஆகியோரை ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். மங்களூருக்கு அருகில் உள்ள எட்காலி குன்றில் இவர்கள் இருவரும் 1800ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதியன்று தூக்கிலிடப்பட்டனர்.

கம்பம் பீர்முஹம்மது பாவலர்

விடுதலைப் போரில் ஈடுபடுவதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையை உதறி எறிந்தவர். கம்பம் பீர்முஹம்மது பாவலர். இவர் கதர் இயக்கத்தின் தீவிரத் தொண்டராகத் திகழ்ந்தவர். விடுதலை உணர்வைத் தூண்டும் நாடகத்தில் நடித்ததற்காக இவர் கைது செய்யப்பட்டு அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பொதுக்கூட்டங்களில் பேச ஆங்கிலேய அரசு இவருக்குத் தடை விதித்தது. அதனால் இவர் வாயைத் துணியால் கட்டிக் கொண்டு மேடையேறி சைகைகளின் மூலம் பேசி வரலாறு படைத்தவர்.

தமிழ்நாட்டில் கதர் இயக்கத்திற்கு அருந்தொண்டு புரிந்தவர்களில் காஜா மியான் ராவுத்தர், 'மேடை முதலாளி' என்று அன்புடன் அழைக்கப்பட்ட மு.ந. அப்துர் ரஹ்மான் சாகிப், ஆத்தூர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

காஜா மியான் ராவுத்தர்

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு இலவசமாகக் கதராடை வழங்கியவர் காஜா மியான் ராவுத்தர். பெருமளவில் கதர்த்துணி உற்பத்தி செய்வதற்காக கதர் ஆலை ஒன்றையே அவர் நிறுவினார்.

'மேடை முதலாளி' அப்துர் ரஹ்மான் சாகிப்

'மேடை முதலாளி' அப்துர்ரஹ்மான் சாகிப் மக்களிடையே கதர் பிரச்சாரம் செய்தார். மக்களுக்கு இலவசமாகக் கதராடை வழங்கினார். கதர்த் துணி தயாரிக்க இவர் தனது வீட்டிலேயே தறி அமைத்தார். பல வீடுகளுக்குச் சென்று கதர் ராட்டினம் கொடுத்து, கதர் நூற்கக் கற்றுக் கொடுத்தார்.

அல்லாமா அப்துல் ஹமீத் பாக்கவி

கதர் அணியாத முஸ்லிம் மணமக்களின் திருமணங்களில் கலந்து கொள்வதில்லை என்று அறிவித்தவர் அல்லாமா அப்துல் ஹமீத் பாக்கவி. இவர் தீவிர கதர் பக்தராகத் திகழ்ந்தவர். இவர் பல ஊர்களுக்குச் சென்று மேடையேறி விடுதலைப் போர் முரசு முழங்கினார்.

முஹம்மது சாலியா

ஆங்கிலேய அரசின் இராணுவத் தளபதியாக இருந்த நீல் எனப்படும் நீசன் மிகுந்த கொடூரக்காரன். சிப்பாய்க் கலகத்தின் போது கண்ணில் பட்ட இந்தியர்களைச் சுட்டுக் கொன்றவன். இவனுக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டிருந்தது. அச்சிலையைத் தகர்க்கும் போராட்டம் 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இராமநாதபுரம் முஹம்மது சாலியா சிலையை சம்மட்டியால் அடித்து உடைத்தார். இவருக்கு முன்று மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த அப்துல் மஜீது, லத்தீ`ப், இராமநாதபுரம் மஸ்தான், பண்ருட்டி முஹம்மது ஹுசைன் முதலியவர்கள் சிலை உடைப்புப் போரில் பங்கு கொண்டு 6 மாதம் முதல் 2 வருடம் வரை கடுங்காவல் தண்டனை பெற்றனர்.

வள்ளல் ஹபீப்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் விடுதலைப் போராட்டத்தில் கிழக்காசியாவில் வாழ்ந்த இஸ்லாமியர்கள் பெரும் பங்கு கொண்டனர். மியான்மரில் (அன்றைய பர்மா) வள்ளல் ஹபீப் பெரும் வணிகராகத் திகழ்ந்தவர். பெரும் கோடீஸ்வரர். நேதாஜி, மியான்மர் சென்ற போது அவர் தம் சொத்துகள் அனைத்தையும் இந்திய நாட்டின் விடுதலைக்காக அர்ப்பணம் செய்தார். அதைக் கண்டு நேதாஜி பிரமித்து விட்டார். இதன் பின் கிழக்காசியாவில் நேதாஜி பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஹபீபின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். 'நாட்டைப் பிடித்திருக்கும் பிணி நீங்க ஹபீப் மருந்து தேவை' என்று அவர் பேசிய கூட்டங்களில் எல்லாம் சொல்லலானார்.

ஹபீபுர் ரஹ்மான், ஷாநவாஸ் கான், கரீம் கனி, மௌலானா கலீலுர்ரஹ்மான், முஹ்யித்தீன் பிச்சை ஆகிய இந்திய முஸ்லிம்கள் நேத்தாஜியின் உதவியாளர்களாக இருந்து அரும் பணியாற்றினார்கள்.

காசிம் இஸ்மாயீல் மன்சூர்

1914-ம் ஆண்டில் சூரத்தில் பிறந்து, சிங்கப்பூரில் வாழ்ந்த காசிம் இஸ்மாயில் மன்சூர் பெரும் வணிகர், கோடீஸ்வரர். 1915ஆம் ஆண்டு ரங்கூனில் முகாமிட்டிருந்த இந்தியப் படையினர் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் புரட்சியில் கலந்து கொள்வதென முடிவு செய்தனர். இந்தப் படை அணியினருக்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி ஊக்குவிக்க முன்வந்தார் காசிம் இஸ்மாயீல் மன்சூர். இந்திய விடுதலைக்காகப் புரட்சியாளர்கள் நடத்தும் கிளர்ச்சியில் கலந்து கொள்ள சிங்கப்பூரிலிருந்து ஆட்களை ரங்கூனுக்கு அனுப்ப அவர் ஏற்பாடு செய்தார்.

இத்தகவல் பிரிட்டிஷ் உளவுத் துறைக்குத் தெரிந்து விட்டது. உடனே இவர் கைது செய்யப்பட்டார். இவர் மீதான குற்றச்சாட்டை இராணுவ நீதிமன்றம் விசாரித்து, இவருக்குத் தூக்குத் தண்டனை விதித்தது. 1915ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர் சிங்கப்பூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.

ரசூலுல்லாஹ், இம்தியாஸ் அலீ, ரக்னுத்தீன்

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக வெளிநாடுகளில் இருந்த இந்திய இராணுவ முகாம்களில் புரட்சி நடத்தத் திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின்படி, சிங்கப்பூரில் முகாமிட்டிருந்த இந்தியக் காலாட்படை அணியினர் புரட்சியில் ஈடுபட்டனர். இராணுவச் சட்டத்தை அமல்படுத்தி இவர்களது புரட்சியை ஒடுக்கினர் ஆங்கிலேயர். புரட்சி பற்றி அவர்கள் விசாரணை நடத்தி ரசூலுல்லாஹ், இம்தியாஸ் அலீ, ரக்னுத்தீன் ஆகிய மூவருமே இப்புரட்சிக்குக் காரணம் என்று கண்டு பிடித்தனர். இராணுவ நீதிமன்றம் இந்த மூவரையும் பலரது முன்னிலையில் சுட்டுக் கொல்லும் படி உத்தரவிட்டது. அதன்படி இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சுபேதார் தண்டுகான், ஜமேதார் கிஸ்டிகான்

புரட்சியில் ஈடுபட்ட காலாட்படை அணிக்குத் தலைமை வகித்த சுபேதார் தண்டுகான், ஜமேதார் கிஸ்டிகான் ஆகியோருக்கு இராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. 1915ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23 அன்று இவர்கள் சிங்கப்பூர் சிறைச்சாலை வாசலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இப்படி இந்திய விடுதலைக்காக முஸ்லிம்கள் செய்த தியாகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நமது உயிராலும், பொருளாலும் எண்ணற்ற தியாகங்கள் செய்து இந்திய நாடு சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்துள்ளோம்.

இந்திய நாடு எங்கள் நாடு, என்றும் நாங்கள் அந்நியரல்ல என்பதை நமது சகோதர சமுதாயத்தினரிடம் எடுத்துச் சொல்வோம். நமது முன்னோர்கள் செய்த தியாகத்தை மறைத்து, இந்த நாட்டிலிருந்து நம்மை அந்நியப்படுத்த நினைக்கும் தீய சக்திகளை அடையாளம் காட்டுவோம்.

Wednesday, 10 May 2017

அபாய உலகில் சில மணிநேர அகோரப் பயணம்: “துரோகி” நூலாய்வு - ஆமினா முஹம்மத்

நேர்த்திமிகு அடித்தளத்துடன் ஆரம்பித்த கட்டடத்தை மெல்ல மெல்ல சுவாரசியமும் எதிர்பார்ப்பும் கொண்ட ‘துரோகி’ எனும் மாளிகையாய் வடித்து, கட்டுமானம் முதல் பிரவேசம் வரையிலான ஒவ்வொரு கட்டத்திலும் அவருடன் நாம் இணைந்தே இருப்பது போன்ற அனுபவத்தை முதல் பக்கத்திலிருந்து இறுதிப் பக்கம் வரை உருவாக்கியிருக்கும் மாயக்காரர் டெர்ரி ஹோல்ட்புரூக்ஸ்! அந்த நேர்த்தியை சிதைத்திடாத வண்ணம், ஆங்கில தடம் அறியா வண்ணம் தமிழுக்கு இடப்பெயர்த்திருக்கிறார் எம்.எஸ். அப்துல் ஹமீது. ஆம்... அப்துல் ஹமீது ட்ரய்டரை மொழிபெயர்க்கவில்லை, துரோகியாக இடப்பெயர்த்திருக்கிறார்! 2017 சென்னை புத்தகத்திருவிழா வரவுகளில் வாசகர்களின் கவனத்தைப் பெற்ற புத்தகங்களில் ஒன்றாக ‘துரோகி’ இருந்தது. - புதிய விடியல்  ஆசிரியர்

அபாய உலகில் சில மணிநேர அகோரப் பயணம்!


இப்புத்தகத்தில் குறிப்பிடப்படும் துரோகி யார்? இரட்டைக் கோபுரத்தை தரைமட்டமாக்குவதில் சதி செய்த அமெரிக்காவா? குவாண்டனாமோவின் சிறைவாசிகளா? அவர்கள் மீது டெர்ரி கொண்ட இரக்கத்திற்காக அவரை தொந்தரவு செய்யும் மேலதிகாரிகளா? என்ற தேடல் இன்னும் வாசிப்பை சுவாரசியப்படுத்தியது. இந்தக் கேள்விகளால் கட்டமைக்கப்பட்ட புத்தகம்தான் ‘துரோகி’.

முதல் பக்கத்தில் துருதுருவென அமெரிக்க வீதிகளில் வலம் வந்த சராசரி இளைஞனான டெர்ரிதான் பின்னட்டையில் தாடி சகிதம் முஸ்லிம் தோற்றத்தில் காட்சி தந்துள்ளார் என்பதே பெரும் சிலிர்ப்பை உண்டாக்கிச் சென்றது. ஹாலிவுட் படம் போலவே புத்தகத்தை துவக்கியிருக்கிறார் டெர்ரி. தரைமட்டமாக்கப்பட்ட, இரட்டைக் கோபுரங்கள் அமைந்திருந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்ட பட்டாளத்தினரில் ஒருவரான டெர்ரி அவ்விடத்தில் சற்று அதிகமாக சிரித்து விட்டார். அவர் சிரிப்பின் காரணம் ‘இதுதான் மனிதகுலத்திற்கு நேர்ந்த மிகப் பெரிய துயரச் சம்பவம்’ என்று அங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்த வாசகம். இந்நேரம் பல்லை நறநறவென கடித்து முஸ்லிம்களுக்கெதிரான பகையை நெஞ்சில் முழுக்க நிரப்பி தன் தாய்நாட்டை சீண்டியவர்களை பழி வாங்கும் குரோதத்துடன் டெர்ரி மனித மிருகமாய் மாறியிருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்கா அவனிடம் எதிர்பார்த்தது.

ஆனால் அதிகாரவர்க்கத்தின் திட்டத்திற்கு டெர்ரி பலியாகவில்லை. ‘இதுவரை நடந்த மனிதப் பேரிழப்புக்கு அருகில் கூட இது வர முடியாது தெரியுமா?’ எனத் தன் சிரிப்பிற்கான காரணத்தை அவர் தன் சக படைவீரர்களிடம் சொன்னபோது எவரும் காது கொடுத்துக் கேட்கவில்லை. இனி புத்தகம் முழுவதும் இதே நிலைதான்... டெர்ரி தவிர பெரும்பாலும் அனைத்து படைவீரர்களும் மனரீதியாக குவாண்டனாமோ கைதிகளை துன்புறுத்தப் போகும் அரக்கர்களாக மாறியிருந்தனர். சாதாரண சிறை அதிகாரியாக டெர்ரி குவாண்டனாமோ செல்வது, அங்கே சிறைவாசிகளுக்கு நேர்ந்த கொடுமை, டெர்ரி முஸ்லிமானது என அனுபவங்கள் பக்கங்களாக விரிகின்றன. எனினும் ஒவ்வொரு பக்கத்திலும் பேரதிர்ச்சியைத் தருகிறார் டெர்ரி!

குவாண்டனாமோ... கியூபாவின் தீவில் அமெரிக்காவால் கட்டப்பட்ட சிறை. சகல பாதுகாப்புடன் கட்டப்பட்ட கொட்டளம். அப்படி இருந்தும் தலையணை கொண்டு கழுத்து இறுக்கி மூன்று கைதிகள் தற்கொலை செய்து சிறைச்சாலையின் கொடூரத்தை உலகுக்கு வெளிச்சம் காட்ட முனைந்தனர். அதன் பின் விக்கிலீக்ஸ் தன்னிடமிருக்கும் கோப்புகளை பத்திரிகைகள் மூலம் வெளியிட்டு சலசலப்பை ஏற்படுத்தியது. இன்னும் பல மொழிகளில் துர் அனுபவ நூல்கள் வந்தாலும் தமிழில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வலைத்தளங்களில் இதன் அகோரங்கள் குறித்து பேசப்பட்டாலும் அவை துல்லியமாக இருந்ததில்லை. முதன்முறையாக ‘துரோகி’ மூலம் இருட்டப்பட்ட அறைக்கு வெளிச்சம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சிறைக் கைதிகள் அனுபவித்த சித்திரவதைகளை ஒவ்வொரு பக்கமும் விவரிக்கின்றன. கடுமையான வெப்பம் நிலவும் உஷணத்தீவு அது. விஷ ஜந்துக்கள் சர்வ சாதாரணமாக மிகைத்திருக்கும் அகோர பூமி. இவையெல்லாவற்றையும் விட வெறுப்பால் உஷ்ணத்திலும் செய்கைகளால் விஷங்களினும் கொடிய மனிதர்களை பயிற்சி சிறைக்கைதிகளிடம் அவர்கள் காட்டவிருக்கும் முகம் கற்பனைக்கும் எட்டிராதது. மரண ஓலங்கள் கூட நாட்டுக்குக் கேட்காது. மேல்முறையீடு, மனு என எதுவும் குவாண்டனாமோ அகராதியில் இல்லை. படங்களில் கூட காட்சிப்படுத்தப்படாத கொடூரங்களின் அரங்கேற்றம் நாள்தோறும் நடந்தது. காதைக் கிழிக்கும் இசையை மிகையழுத்த ஒலியில் நீண்ட நேரம் ஒலிக்கச் செய்வதும், சதையையும் எலும்பையும் இறுக்கும் அளவுக்கு குளிரூட்டப்பட்ட அறையில் கைதிகளை விடுவதும், விலங்குகளை ஏவி கைதிகளை துன்புறுத்துவதுமாக சித்திரவதைகள் பல வண்ணங்களில் அரங்கேற்றம் செய்யப்பட்டன!

சாத்தான்களின் கண்காணிப்பில்தான் பாவப்பட்ட சிறைக்கைதிகள் விடப்பட்டுள்ளனர். ஆம்... இவர்கள் அப்பாவிகள் என்பது அமெரிக்காவுக்கும் கூட தெரியும் என்று விக்கிலீக்ஸ் பகிரங்கமாக அறிவித்தது. இந்த உண்மை நிலை மனோவியல் ரீதியாக பயிற்சியளிக்கப்பட்ட எந்த அதிகாரிக்கும் புரியாது. ஆனால் நாம் முன்பே சொன்னது போல் ஆரம்பம் முதலே இதில் நாட்டமில்லாத டெர்ரி மனிதத் தன்மையுடன் கைதிகளிடம் நடந்துகொண்டார். இத்தனை சித்திரவதைகளுக்குப் பின்னும் சிறைவாசிகள் முகத்தில் படரும் புன்னகை டெர்ரியை வெகுவாக ஈர்த்தது. பாங்கோசையை சிதைத்து ஒலிக்கச் செய்வதன் மூலமும், இஸ்லாத்தைப் பற்றி தவறாக பேசுவதன் மூலமும் மனரீதியாகவும் அவர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

எனினும் அந்த அழுத்தங்கள் பெயரளவு முஸ்லிம்களையும் தன் மார்க்கத்தில் வலுவுள்ளவர்களாக மாற்றிய உளவியல்களையும் கவனிக்கத் தவறவில்லை டெர்ரி. இவையெல்லாம் சேர்த்து இன்னும் அவர்களுடன் நெருங்கிப் பழகும் ஆர்வத்தை டெர்ரிக்கு தூண்டியது. அதுதான் டெர்ரிக்கு பல சங்கடங்களை ஏற்படுத்தியது. கைதிகளின் மீது இரக்கம் கொண்ட டெர்ரி மற்ற அதிகாரிகளிடமிருந்து வித்தியாசப்பட்டிருந்ததை மற்றோர்கள் துல்லியமாக கவனித்துவிட்டார்கள். இதன் மூலம் டெர்ரிக்கும் அடி உதை விழுந்தது. அதையும் மீறி அவர் மனம் கைதிகள் பற்றி சிந்திக்கலாயிற்று! அது அவரை தூய மார்க்கத்தின் பால் நங்கூரம் பாய்ச்சி நிலை நிறுத்தியது. டெர்ரி ‘முஸ்தஃபா அப்துல்லாஹ்’வானார்.

‘துரோகி’யின் பக்கங்கள் 203 உடன் நிறைவு பெற்றாலும் அடுத்தடுத்த வாசிப்புக்கு அழைத்துச் செல்ல தூண்டியிருக்கிறது. அதில் முக்கியமாக டெர்ரி தான் சந்தித்ததாகக் கூறும் வித்தியாசமான மனிதர் டேவிட் ஹிக்ஸ். சிறையில் உள்ளோர் தாம் குற்றமற்றவர்கள் என்பதை சொல்வது வழக்கம். ஆனால் டெர்ரி சந்தித்த டேவிட் ஹிக்ஸ் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவர். உசாமாவுடன் தான் பழகியதையும் அல் கொய்தாவில் தாம் பயிற்சி பெற்றதையும் மறைக்காமல் பகிர்ந்து தன் நிலையை ஒப்புக்கொண்டிருந்ததாக டெர்ரி குறிப்பிட்டிருந்தார். இந்த டேவிட் ஹிக்ஸ் குவாண்டனாமோவிற்கு வந்த முதல் கைதிக் குழுவில் ஒருவர். அவர் மீதான குற்றத்தை விலக்கி அவரை விடுதலை செய்தது நீதிமன்றம். டேவிட் ஹிக்ஸ் எழுதிய “குவாண்டனாமோ: எனது பயணம்” என்ற நூலும் சித்திரவதைக் கூடத்தின் சித்திரத்தை அப்பட்டமாக விளக்குகிறது. இன்னும் முன்னாள் கைதிகளின் நூல்கள் அதிகம் காணக் கிடைக்கின்றன. வாய்ப்பு கிடைப்பின் அதையும் வாசித்துப் பார்க்க பரிந்துரைக்கிறேன்.

சமூகத்தின் தேவை, தேவையின் விழிப்புணர்வு, விழப்புணர்வின் இலக்கு, இலக்கின் பயணம் என அனைத்தையும் ஒருங்கே திட்டமிட்டு சிந்தனையை சரியான திசைக்குக் கொண்டு செல்லும் இலக்கியச்சோலையின் மற்றுமொரு மைல்கல் ‘துரோகி’.

அபாயகரமான உலகை நோக்கிய அகோரப் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் அனுபவத்தை சிலமணி நேர வாசிப்பு கொடுத்து விட்டுச் செல்கிறது. சமூகத்தின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.

ஆமினா முஹம்மத்

இக்கட்டுரை புதிய விடியல் ஏப்ரல் 16-30, 2017 இதழில் வெளியானது.

Saturday, 6 May 2017

நெருக்கடியில் முஸ்லிம்களின் நிலைப்பாடு!


இன்று முஸ்லிம்களுக்கு நெருக்கடியான காலகட்டம். ஆட்சி பீடங்கள் எதிரிகளின் கைகளில் அடைக்கலமாகி விட்ட நேரம் இது. மாட்டு உயிரை விட மலிவாக முஸ்லிம்களின் உயிர்கள் மாறிவிட்ட காலம் இது.

இந்தச் சமயத்தில் முஸ்லிம்கள் மேற்கொள்ள வேண்டிய நிலைப்பாடு மிக முக்கியம் வாய்ந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இக்கட்டான காலத்தில் என்ன நிலைப்பாடு எடுத்தார்கள், எப்படி தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக்கொண்டார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.

இன்று இந்தியா மதச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் உள்ள நாடு என்று சொல்லப்படுகிறது. ஆனால் முஸ்லிம்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு மட்டும் கழுத்துச் சுறுக்கு இடப்படுகிறது. பலருக்கும் முஸ்லிம்களின் மதச் சுதந்திரத்தில் மட்டும் மாச்சரியங்கள் ஏற்பட்டு விடும்.

இதே நிலை அன்றைய மக்காவிலும் இருந்தது. மக்காவின் மதச் சடங்குகளைத் தாண்டி வெளியிலுள்ள வணக்க வழிபாட்டு முறைகள் எதனையும் எதிர்க்கும் பழக்கம் மக்காவாசிகளுக்கு இருந்ததில்லை. இறைபக்தர்களும், வியாபாரிகளுமாக வெளிநாட்டுக்காரர்கள் அதிகம் வந்து போகின்ற ஊராக மக்கா இருந்ததால் கலாச்சார சகிப்புத்தன்மை இயல்பாகவே அங்குள்ள மக்களுக்கு இருந்தது.

புனித கஅபா ஆலயம் உள்ள பகுதியில் அமைதி குலையாமல் குறைஷிகள் சிறப்பு கவனம் எடுத்து பார்த்துக் கொண்டார்கள். அங்கே உரிமை மீறல்களையும், இரத்தம் சிந்துவதையும் அவர்கள் அனுமதித்திடவில்லை.

அதனால்தான் மக்காவாசிகளின் பலதெய்வக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த வரகா இப்னு நவ்ஃபல், ஸைத் இப்னு கத்தாப் போன்ற வேற்று மதப் பண்டிதர்கள் எந்தவித அச்சமுமில்லாமல் மக்காவில் சுதந்திரமாக வாழ முடிந்தது. அப்படியானால் முஹம்மத் (ஸல்) அவர்களின் புதிய மார்க்கத்தை மட்டும் மக்காவாசிகள் மல்லுக்கட்டி எதிர்த்தது ஏன்?

முஹம்மத் (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தில் இருந்த அதிக முக்கியத்துவத்தை அவர்கள் ஆரம்பத்திலேயே உணர்ந்தார்கள். தங்கள் சமூக அந்தஸ்து தகர்ந்து போகும் என்று அஞ்சினார்கள். அதனால்தான் அவர்கள் அண்ணலாரையும், அவர்தம் தோழர்களையும் ஏற்க மறுத்தார்கள். அவர்களுக்கு சொல்லொணா துயரங்களைக் கொடுத்தார்கள்.

இன்று இந்தியாவில் முஸ்லிம்களை மட்டும் எதிரிகள் அதிகமாக குறி வைப்பதும் இதே காரணத்திற்காகத்தான். இஸ்லாம் தழைத்தோங்கி விட்டால், முஸ்லிம்கள் அனைத்து உரிமைகளையும் பெற்று சம உரிமைகளுடன் வாழ ஆரம்பித்து விட்டால் அவர்களது குடுமிகள் ஆட்டம் கண்டு விடும் என்று அஞ்சுகிறார்கள்.

மக்காவுக்கு சிறிது தூரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமில்லாத ஓரிடத்தில் முஸ்லிம்கள் ஒரு தடவை கூட்டாக தொழுகையில் ஈடுபட்டிருந்ததை குறைஷிகள் பார்த்தவுடன் அவர்களைத் தாக்கினார்கள். ஆட்கள் குறைந்த பலஹீனமான நிலையிலும் முஸ்லிம்கள் கையில் கிடைத்ததைக் கொண்டு திருப்பித் தாக்கினார்கள். ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) ஒட்டகத்தின் நாடி எலும்பைக் கொண்டு எதிரிகளைத் தாக்கினார்.

ஒரு சமூகத்தின் மேல் தொடர்ந்து நடத்தப்படும் துன்புறுத்தல்களும், புறக்கணிப்புகளும் அதன் தனித்துவம் பாழ்படுவதற்குக் காரணமாகி விடும். அச்சம் என்பது அடிமைத்தனத்தின் பாதையைத் திறந்து கொடுக்கும்.
அதனால்தான் அண்ணலார் அவர்தம் தோழர்களை சுதந்திரமாக வாழ வைக்க முயற்சிகளை எடுத்தார்கள். எதிரிகளின் விமர்சனங்களையும் கிண்டல்களையும் கண்டு பயந்து ஒதுங்கி நிற்காமல் மக்காவிலேயே அவ்வப்பொழுது பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

தங்கள் உரிமைகள் எதனையும் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை. குறைஷிகளின் பிடியிலிருந்த கஅபாவில் வைத்து மக்கள் கேட்கும்படி உலக மறையை உரக்க ஓதினார்கள். பகிரங்கமாக பல பேர் பார்க்கும் வண்ணம் தொழுதார்கள்.

நிராகரிப்பாளர்களுக்கு பலமான பதிலடிகள் அடங்கிய குர்ஆன் பாகங்கள் இறங்கிய காலகட்டமாக இருந்தது அது. ஊர்க்காரர்களின் வெறுப்புக்கு அஞ்சி அண்ணலார் அந்த அருள்மறை வசனங்களையெல்லாம் பகிரங்கப்படுத்தாமல் மூடி வைத்திருக்கலாம். அப்படிப்பட்ட வீழ்ச்சி நேரிட்டுவிடக் கூடாது என்று அல்லாஹ் அண்ணலாருக்குக் கட்டளை பிறப்பித்தான்.

(நபியே! நம் வசனங்களை அவர்கள் செவிமடுப்பதில்லையே எனச் சடைந்து) வஹீ மூலம் உமக்கு அறிவிக்கப்பட்டவற்றில் சிலவற்றை விட்டுவிட எண்ணவோ, “அவர் மீது ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு மலக்கு வர வேண்டாமா?” என்று அவர்கள் கூறுவதினால் உம் இதயம் (சஞ்சலத்தால்) இடுங்கியிருக்கவோ கூடும். நிச்சயமாக நீர் அச்சமூட்டி எச்சரிப்பவரேயன்றி வேறில்லை. அல்லாஹ் எல்லா பொருட்களின் மீதும் பொறுப்பாளனாக இருக்கிறான். (ஹூது 11:12)

இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் பலஹீனமாக இருந்த மக்கா வாழ்க்கையில் தங்கள் சக்திக்கேற்ப சத்தியத்தின் பாதையில் மக்களை அழைத்து மார்க்கத்தைப் பாதுகாத்தார்கள். மதீனா சென்றதும் தங்கள் பலத்தை ஒன்று திரட்டி எதிரியுடன் பொருதினார்கள்.

ஆக, எந்நிலையிலும் நமது கலாச்சாரத்தையும், உரிமைகளையும் விட்டுவிடக் கூடாது. எதிரிகளின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணிவது அடிமைத்தனத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. இதுதான் முஸ்லிம்களின் நிலைப்பாடாக இருக்க வேண்டும்.